பக்கத்துவீட்டு பெண்ணை பலாத்காரம் செய்த குர்கான் துணை மேயர் மீது வழக்கு
குர்கான்: முனிசிபால் கார்பரேஷனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குர்கான் துணை மேயர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
குர்கான் துணை மேயராக இருப்பவர் பர்மிந்தர் கட்டாரியா. அவர் குர்கான் முனிசிபல் கார்பரேஷனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அசோக் விஹார் பகுதியில் தனியாக வசித்து வரும் 36 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண் கட்டாரியாவின் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கட்டாரியா அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
கட்டாரியா தன்னை பலாத்காரம் செய்தது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் கட்டாரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டாரியா தனக்கு வேலை வாங்கித் தருவதோடு மட்டும் அல்லாமல் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications