பிரசவத்தில் கர்ப்பிணி இறப்பு.. கொலை வழக்கு பதியப்பட்ட மருத்துவர் தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்த்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனையை நடத்தி வந்தார். அர்ச்சனா மகப்பேறு மருத்துவராக இருந்தார். இந்த மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான சிகிச்சை, பிரசவம், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பெண்கள் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவரது மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரசவ வலி
அவருக்கு பிரசவ வலி வந்த போது டாக்டர் அர்ச்சனா சர்மா பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு உதிரப்போக்கு அதிகமாக இருந்தது. இதனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். கர்ப்பிணியின் சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

பெண்ணின் உறவினர்கள்
இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினார்கள். டாக்டர் அர்ச்சனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய அவர்கள் அர்ச்சனா மீது போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் டாக்டர் அர்ச்சனா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

மனவேதனை
இதனால் மருத்துவர் மன வேதனை அடைந்தார். என் மீது வேண்டும் என்றே பழி சுமத்தப்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் மேல் மாடியில் இருந்த வீட்டில் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தற்கொலை கடிதம்
அப்போது அர்ச்சனா எழுதியதாக ஒரு தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: நான் எனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பிறகு அவர்களை துன்புறுத்தாதீர்கள். நான் எந்த தவறுமே செய்யவில்லை.

கொல்லவில்லை
யாரையும் கொல்லவும் இல்லை. அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம் என அந்த கடிதத்தில் அவர் உருக்கமாக எழுதியிருந்ததாக போலீஸார் தெரிவித்திருந்தனர். பெண் டாக்டர் தன் உயிரை மாய்த்தக் கொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

முதல்வர் அசோக் கெலாட்
அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக போலீசார் நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் அசோக் கெலாட் கூறினார். மேலும் இதுகுறித்து அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டாக்டர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ட்வீட்
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிகளின் உயிரை காக்கவே போராடுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் துரதிருஷ்டவசமான இறப்பு சம்பவங்களுக்கு டாக்டரை குறை கூறுவது நியாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications