Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக VS காங்கிரஸ்.. அக்டோபர் 1ல் ஹரியானா சட்டசபை தேர்தல்.. வெல்வது யார்? களநிலவரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஹரியானா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஹரியானா மாநிலத்தில் எத்தனை சட்டசபை தொகுதிகள் உள்ளன? தற்போது ஆட்சியில் எந்த கட்சி உள்ளது? வரும் தேர்தலில் எந்த கட்சிகள் இடையே போட்டி நிலவ உள்ளது? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக அறிவிகத்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

assembly elections 2024 Election Commission Haryana 2024

தேர்தல் ஆணையம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ஸ் நிலவியது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடைத்தார். அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஜம்மு காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு அக்டோபர் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் ஹரியானா மாநில நிலவரத்தை இங்கு பார்ப்போம். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஹரியானா மாநிலத்துக்கு இதற்கு முன்பு கடந்த 2019 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த சட்டசபையின் பதவிக்காலம் என்பது நவம்பர் மாதம் 3ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்து.

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக நயாப் சிங் சைனி உள்ளார். இது ஒரு மைனாரிட்டி அரசு என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அழைக்கப்படுகிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.

கடந்த 2019 தேர்தலில் இந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 40 இடங்களில் பாஜக வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வென்றது. ஜேஜேபி கட்சி 10, ஐஎன்எல்டி, எச்எல்பி கட்சிகள் தலா ஒன்று, சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றனர். இதையடுத்து பாஜக சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சியை பிடித்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக செயல்பட்டு வந்தார்.

அதன்பிறகு நடந்த அரசியல் மாற்றங்களால் பாஜகவின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 41 ஆக அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 29 ஆக சரிந்தது. தொடர்ந்து சுயேச்சைகள் ஆதரவில் பாஜக ஆட்சியை தொடர்ந்தது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு மனோகர் லால் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய முதல்வராக நயாப் சிங் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 3 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். மேலும் அவர்கள் காங்கிரசுடன் கைகோர்த்தனர்.

இதனால் தற்போது ஹரியானாவில் 87 எம்எல்ஏக்கள் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் ஆட்சியை பிடிக்க 44 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் தற்போது பாஜகவுக்கு 41 எம்எல்ஏக்கள், எச்எல்பி கட்சியின் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு, சுயேச்சை ஒருவரின் ஆதரவு என்று மொத்தம் 43 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன. இதனால் பாஜக மைனாரிட்டி அரசு என அழைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகளின் ஆதரவு உள்ளது. இதுதவிர ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள், ஐஎன்எல்டி கட்சிக்கு ஒரு எம்எல்ஏ, ஒரு சுயேச்சை என மொத்தம் 12 பேர் காங்கிரஸ், பாஜக என யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவ உள்ளது. பாஜக ஆட்சியை தக்க வைக்கும் முயலும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும். அதேவேளையில் ஜேஜேபி கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க துடிக்கும். அதுமட்டுமின்றி செல்வாக்கை நிரூபித்து கணிசமான இடங்களில் வென்றால் கிங் மேக்கராக மாறலாம் என்பதால் ஜேஜேபி கட்சியும் தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.06 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 95 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். மேலும் மொத்த வாக்காளர்களில் முதல் முறையாக 4.52 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஹரியானாவில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை ஒப்பிடும்போது ஹரியானா மிகவும் சிறிய மாநிலமாகும். இதனால் அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்காக தமிழக வாக்காளர்களின் இறுதி பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் 3.14 கோடி பேர் பெண்கள் ஆவார்கள். 3.03 கோடி பேர் ஆண்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் 8,200 என்ற அளவில் இருந்தனர். ஆனால் ஹரியானாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 2.06 கோடியாக மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+