ஹரியானா: காங்கிரஸிலும் வெடித்த அதிருப்தி குரல்கள்.. 42 ' தலைகள்' சுயேட்சைகளாக போட்டி!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் 42 பேர் சுயேட்சையாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். பாஜகவில் சீட் கிடைக்காமல் காங்கிரஸுக்கு ஓடி வந்த மாஜி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு நடுவே காங்கிரஸும் அதிருப்தி புயலில் சிக்கித் தத்தளிக்கிறது.
ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் 90 தொகுதிகளிலும் அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா மாநிலத்தில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருப்பதால் கடும் அதிருப்தி அலைதான் வீசுகிறது. இதனை சமாளிக்க பாஜகவும் பல்வேறு வியூகங்களை வகுத்திருக்கிறது. குறிப்பாக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் இந்த முறை போட்டியிட வாய்ப்புதரப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பலரும் காங்கிரஸுக்கு தாவிக் கொண்டிருக்கின்றனர்.
அதேநேரத்தில் ஹரியானா தேர்தலில் எப்படியும் வெற்றி நிச்சயம் என்கிற கனவில் இருக்கிறது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் கட்சியில் முட்டி மோதி சீட் வாங்கிவிட பலரும் துடியாய் துடித்தனர். ஆனால் இவர்கள் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதில் அதிருப்தி அடைந்த பலர் சுயேட்சைகளாகவும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியில் 42 பேர் சுயேட்சைகளாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே ஹரியானாவில் ஆம் ஆத்மி, ஜனநாயகக் ஜனதா கட்சி வேட்பாளர்கள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க காத்திருக்கின்றனர். இத்துடன் அதிருப்தி வேட்பாளர்களும் பெரும் எண்ணிக்கையில் சுயேட்சைகளாக களமிறங்குவது காங்கிரஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. இதனால் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிருப்தியாளர்களால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு 30 தொகுதிகளில் பாதிக்கப்படக் கூடிய அபாயமும் இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஹரியானாவில் பெருந்தலைகள் தங்களது வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் சீட் கொடுத்துவிட்டதாலே இந்த பிரச்சனை எனவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவின் மகன் ஆதித்யா, ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லால் மகன் சந்திர மோகன், லோக்சபா எம்பி ஜெய் பிரகாஷ் மகன் விகாஷ் சஹாரன், லோக்சபா எம்பி வருண் சவுத்ரி மனைவி பூஜா சவுத்ரி என இந்த வாரிசுகளே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருப்பதால் சிக்கல் என்கின்றனர் அதிருப்தியாளர்கள்.












Click it and Unblock the Notifications