காவிரி நதி நீர் பங்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் தொடங்கியது
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு இறுதி விசாரணையில் கர்நாடகம், கேரளம் ஆகிய அரசுகளின் வாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழக அரசின் வாதம் புதன்கிழமை இன்று தொடங்கியது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் கர்நாடக அரசின் வாதம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள அரசு வாதம் முன் வைத்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதம் முன் வைத்தார்.
அவரது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கேரளா மேலும் தெரிவிக்க விரும்பினால், தமிழகத்தின் வாதத்துக்குப் பிறகு அனுமதிக்கப்படும் என தெரிவித்து, இறுதி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து தமிழகத்தின் வாதம் இன்று தொடங்கியுள்ளது.