சிஎம்முக்கு தர வேண்டிய சமோசாவை பாதுகாப்பு ஊழியர்கள் சாப்பிட்டது அரசுக்கு எதிரான செயல்: சிஐடி அறிக்கை
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சுக்குவிற்கு வழங்கப்பட வேண்டிய சமோசா மற்றும் கேக்குகள் அவரது பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அது அரசுக்கு எதிரான செயல் என்று சிஐடி காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சிம்லாவில் உள்ள சிஐடி காவல் துறை தலைமையகத்தில் இணையவழி குற்றப் பிரிவு நிலைய திறப்பு விழா அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சுக்கு பங்கேற்று நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் சுக்விந்தர் சுக்கு சாப்பிடுவதற்காக ரேடிசன் ப்ளூ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து சமோசாக்கள் மற்றும் கேக்குகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், அந்த சிற்றுண்டியை முதல்வருக்கு வழங்காமல் அவருடைய பாதுகாவலர்களுக்கு அங்கிருந்தவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், முதல்வருக்கு வழங்கப்பட வேண்டிய சமோசா, கேக்குகள் அவரது பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்டது குறித்து சிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்வரின் பாதுகாவலர்களுக்கு சமோசாக்கள், கேக்குகள் வழங்கியது பெண் சார்பு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி டிஎஸ்பி கூறுகையில், ஐஜி ரேங்கில் இருந்த ஒரு அதிகாரி தன் சாப்பிடுவதற்காக அங்கிருந்த எஸ்ஐ ஒருவரிடம் ஸ்நேக்ஸ் கேட்டுள்ளார். இதையடுத்து முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்நேக்ஸ் டப்பாக்களை எடுத்து கொடுத்துள்ளனர். அங்கிருந்த உயரதிகாரிகளுக்கு அது முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்நேக்ஸ் என்று தெரியும். கீழே இருந்தவர்கள் தான் எடுத்து கொடுத்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு பெண் சார்பு கண்காணிப்பாளர் உள்ளிட்டோரே காரணம், அவர்கள் மாநில அரசுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளனர். உயரதிகாரிகளிடம் கேட்காமல், பல கைகள் மாறி ஸ்நேக்ஸ் பாக்ஸ் சென்றுள்ளது. என்று கூறினார்.
இதனால் விவிஐபிக்கு அந்த உணவு பரிமாற முடியவில்லை . இது மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று சிஐடி உயரதிகாரி அதில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் மாநில அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத அரசு முதலமைச்சருக்கு வழங்க வேண்டிய சமோசா மீது மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது. சமோசா பிரச்னைக்கு எல்லாம் அரசாங்கத்துக்கு எதிரான செயல் என்று வழக்குப் பதிவு செய்வது மிகப்பெரிய தவறு.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் இதை பெரிய பிரச்னையாக மாநில அரசு விவாதித்துக் கொண்டிருக்கிறது. இது பிரச்னையின் மூலம் அரசாங்கத்தில் அதிகாரிகளிடம் உள்ள தகவல் தொடர்பின் அவலமும் அம்பலமாகியுள்ளது. என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீர் சர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications