இமாச்சலை சுத்துப்போட்ட மழை மேகங்கள்.. இன்னும் 5 நாட்களுக்கு அடை மழை! வானிலை மையம் எச்சரிக்கை
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது வரை 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இமாச்சலத்தில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி தற்போது வரை பெய்துள்ள கனமழை ஏராளமான சேதங்களை உருவாக்கியுள்ளது. இம்மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு, சுமார் ரூ.2,100 கோடிக்கு அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜல் சக்தி துறைக்கு மட்டும் ரூ.1,000 கோடியும், பொதுப்பணித்துறைக்கு ரூ.890 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பிரதான சாலைகளை வெள்ளம் துண்டித்துள்ளது. சுமார் 1,110 சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மண்டலத்தின் கீழ் 355 சாலைகளும், ஹமிர்பூர் மண்டலத்தின் கீழ் 23 சாலைகளும், காங்க்ரா மண்டலத்தின் கீழ் 39 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகளை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டாலும் தொடர் மழை புதிய சாலைகளை அடித்து சென்றுவிடுகிறது.
அதேபோல மாநிலம் முழுவதும் பரவலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீரை கொண்டு செல்லும் ராட்சத பைப்புகள் சேதமடைந்துள்ளதால் மலை பகுதிகளில் குடிநீரை கொண்டு சேர்ப்பது சவாலான விஷயமாக மாறியுள்ளது. மேலும், பாதாள சாக்கடை அமைப்புகளும் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளது. எனவே சாலைகளிலும், ஆறுகளிலும் கழிவு நீர் நேரடியாக கலக்கப்படுகிறது. இந்த மொத்த பாதிப்புகளை சரி செய்ய நீண்ட காலம் ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இதுவரை 1,764 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 636 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. 1,128 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை மாநிலம் முழுவதும் 91 பேர் பலியாகியுள்ளனர். சிம்லா மாவட்டத்தில் 25, குலு மாவட்டத்தில் 27, சம்பாவில் 12, சோலனில் 7, ஹமிர்பூரில் 5, சிர்மூரில் 4, பிலாஸ்பூர் மற்றும் கின்னார் மாவட்டங்களில் 3-3, உனா மற்றும் மண்டியில் 2-2, காங்க்ராவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாநிலம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சுகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக பேரிடர் மீட்புப் படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications