இரவோடு இரவாக பறந்த போன் கால்.. "எல்லையில் என்ன நடக்கிறது!" ராணுவ ஜெனரல்களுடன் அமித் ஷா தீவிர ஆலோசனை
டெல்லி: காஷ்மீர் உட்படப் பல பகுதிகளில் நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இந்தியா முறியடித்துவிட்ட போதிலும் எல்லையில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லைப் பாதுகாப்பு ஜெனர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தே தீருவேன் என பாகிஸ்தான் இருக்கிறது. ஏற்கனவே புதன்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அதை இந்தியா முறியடித்திருந்தது. இதற்கிடையே நேற்று வியாழன் இரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

திடீர் தாக்குதல்
காஷ்மீர் தொடங்கிப் பல இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. இருப்பினும், அதை இந்தியப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது. இதன் காரணமாக எல்லையில் இப்போது உச்சக்கட்டப் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், எல்லை முழுக்க ஹை அலர்ட் மோடில் பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள்.
அமித் ஷா
இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்புப் படைகளின் இயக்குநர் ஜெனரல்களுடன் பேசியிருக்கிறார். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே எல்லைப் பாதுகாப்புப் படைகளின் இயக்குநர் ஜெனரல்களை தொடர்பு கொண்ட அமித் ஷா அங்கு நிலவும் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.
போன் போட்டு ஆலோசனை
இந்தியாவில் விமானச் சேவை பெரிதாக பாதிக்கப்படவில்லை. வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஒரு சில விமான நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மற்றபடி டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் விமானச் சேவை இயல்பாகவே இருக்கிறது. இதற்கிடையே விமான நிலைய பாதுகாப்பு குறித்தும் அமைச்சர் அமித் ஷா, மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலுடனும் ஆலோசித்துள்ளார்.
உள் துறை அமைச்சர் என்பதால் எல்லைப் பாதுகாப்புப் படை அமித் ஷா கட்டுப்பாட்டில் தான் வரும். இதன் காரணமாகவே தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே இரவோடு இரவாக அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.
அத்துமீறும் பாகிஸ்தான்
நேற்றிரவு சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய ராணுவ நிலையங்களை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இருப்பினும், இந்தியப் பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. உயிரிழப்போ காயமோ அல்லது எந்தவொரு பொருள் தேசமோ கூட ஏற்படவில்லை.
இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஜம்மு & காஷ்மீரின் குப்வாரா, டாங்தார் மற்றும் கர்னாஹ் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த மோதலைப் பொறுத்தவரை இந்தியா எந்தவொரு இடத்திலும் முதலில் தாக்குதல் நடத்தவே இல்லை. இந்தியா அமைதி கொண்டு வரவே விரும்புகிறது. அதேநேரம் பாகிஸ்தான் தாக்குதலை நடத்துவதற்குத் தக்கப் பதிலடியை மட்டுமே இந்தியா கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications