5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த பிரபல திருடன்.. சிக்கியது எப்படி?
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 42 வயது நபர் திருட முயன்றார். இதனை போலீசார் பார்த்ததும் அவர் ஓடும் ரயிலி்ல இருந்து குளத்துக்குள் குதித்தார். 5 மணிநேரம் போலீசார் தீவிரமாக தேடி அவரை குளத்தில் இருந்து கைது செய்தனர். இந்நிலையில் தான் குளத்துக்குள் 5 மணிநேரம் மூச்சடிக்கி அந்த திருடன் இருந்தது எப்படி? தாமரை தண்டு எப்படி அவருக்கு உதவியது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருடுவது சட்டப்படி குற்றமாக இருந்தாலும் கூட பலரும் திருந்துவது இல்லை. பூட்டிய வீடு, அலுவலகம், கடைகள், வங்கிகளில் நுழைந்து திருடுவது, பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவது, சாலைகளில் செல்லும் மக்களை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடிப்பது என்று பல்வேறு சம்பவங்களில் திருடர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறைகளை பயன்படுத்தி நகை, பணத்தை அள்ளி செல்கின்றனர். இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் கூட பலரும் திருந்துவது இல்லை. தொடர்ந்து திருட்டில் தான் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் கிதவுலா என்ற பகுதியில் அதிகாலையில் ரேவா - இத்வாரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஏசி பெட்டியில் பெண் ஒருவர் பயணித்தார். இந்த ரயில் சிஹோரா ரோடு ரயில் நிலையம் அருகே குறைந்த வேகத்தில் சென்றது.
அப்போது ரயிலுக்குள் ஏறிய ஒருநபர் திடீரென்று அந்த பெண்ணின் கையில் இருந்த பையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியில் அந்த பெண் கூச்சலிட்டார். அப்போது அந்த பெட்டியில் இருந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து பயந்துபோன திருடன் ஓடும் ரயிலில் இருந்து அருகே உள்ள குளத்துக்குள் குதித்தார்.
இந்த சம்பவம் அதிகாலை 5.15 மணிக்கு நடந்தது. அந்த குளம் பாசி மற்றும் தாமரை செடிகள் நிரம்பி இருந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அருகே உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நீச்சல் வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரழைக்கப்பட்டனர். குளம் முழுவதும் அவர்கள் தீவிரமாக தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
மேலும் நீண்டநேரம் ஆகியும் திருடனை கண்டுபிடிக்க முடியாததால் அவன் இறந்து இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். இதனால் கூடுதலாக நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இறுதியாக காலை 10.30 மணிக்கு அந்த திருடன் சிக்கினான். சுமார் 5 மணிநேரம் அவன் குளத்துக்குள்ளேயே மூச்சை அடக்கி இருந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். தண்ணீருக்குள் 5 மணிநேரம் மூச்சடிக்கி இருந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது பாசி படர்ந்த மேற்பரப்பிற்கு அடியில் தாமரை தண்டுகள் உள்ளன. இந்த தாமரை தண்டுகள் குழாய் போல் இருக்கும் என்பதால் அதனை பயன்படுத்தி அவர் சுவாசித்து இருப்பது தெரிவந்தது.
மேலும் விசாரணையில் அவரது பெயர் ஹர்விந்தர் சிங் என்ற சன்னி என்பதும், வயது 42 என்பதும் தெரியவந்தது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரயில்களில் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது போபாலில் 5 வழக்குகளும்,மகாராஷ்டிரா, கேரளா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அந்த வழக்குகளில் அவரை போலீசார் தேடிவருவதும் தெரியவந்தது.
குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டில், விசாகப்பட்டினத்தில் ஒரு ரயிலில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களை திருடியதில் ஹர்விந்தர் சிங்கிற்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. ஏசி பெட்டியில் பணக்காரர்கள் பயணிப்பார்கள் என்பதால் அதனை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும், போலீசிடம் சிக்காமல் இருக்க ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை தனது திருடும் ரயில் வழிப்பாதையை மாற்றி வந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications