வாரணாசியில் மோடியை தோற்கடிப்பேன்: அரவிந்த் கேஜ்ரிவால் சபதம்
டெல்லி: வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கிழக்கு டெல்லியில் ராஜ்மோகன் காந்தியை ஆதரித்து இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கேஜ்ரிவால் பேசியதாவது:
எங்களுடைய இலக்கு நாடாளுமன்றத்துக்குள் நுழைவதுதான். அதற்காகவே வாரணாசியில் போட்டியிடுகிறோம். நான் மோடியை தோற்கடிக்க விரும்புகிறேன். அதனால்தான் வாரணாசியில் போட்டியிடுகிறேன்.

அதேபோல் அமேதியில் ராகுலைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காகவே குமார் விஸ்வாஸை களமிறக்கியுள்ளோம். மோடியும் ராகுலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள்தான் இரண்டு மிகப் பெரிய ஊழல் கட்சிகளின் தலைவர்கள்..
பாரதிய ஜனதா ஊழல்வாதி எதியூரப்பாவை வேட்பாளராக நிறுத்துகிறது... ஆனால் ஆம் ஆத்மியோ காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியை களமிறக்கியுள்ளது. இதுதான் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்குமான வேறுபாடு.
எந்த ஒருகாலத்திலும் நான் எந்த ஒரு கட்சியிலும் சேருவதாக சொன்னதே இல்லை. குஜராத்திலும் ஹரியானாவிலும் என் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.. வாரணாசியில் முட்டைகளை வீசினார்கள்..
இந்த சம்பவங்களுக்கு பாஜகவும் காங்கிரஸும்தான் பொறுப்பு. அவர்கள் நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள்.. ஆனால் நாம் ஊழலை ஒழிக்கும் வரை போராடுவோம்.
இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
முன்னதாக கிழக்கு டெல்லியின் கீதா காலனி என்ற பகுதியில் கேஜ்ரிவாலுக்கு எதிராக கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications