களத்தில் குதித்த 6 மாதங்களில் பிரதமர் நாற்காலியை பிடித்து சாதனை படைத்த மோடி!
பெங்களூர்: குஜராத் மாநிலத்தை விட்டு தேசிய அரசியலுக்கு வந்த ஆறே மாதங்களில் நாடு முழுவதும் ஆதரவு அலையை உருவாக்குவதிலும், அதை வாக்குகளாக அறுவடை செய்வதிலும் நரேந்திரமோடி வெற்றி பெற்றுள்ளார்.

செங்கோட்டைக்கு
குஜராத்தின் மேத்நகர் என்ற சிற்றூரில் பிறந்து டெல்லி செங்கோட்டைக்குள் செல்லும் நரேந்திரமோடி, இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராக சாதனையை குறுகிய காலத்தில் செய்து முடித்துள்ளார். 2001 ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் பதவி விலகியதால் முதல்வரான நரேந்திரமோடி, 2002 சட்டசபை தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்தார். இதன்பிறகு எப்போதுமே ஏறுமுகம்தான் மோடிக்கு.

வெற்றிடத்தை நிரப்ப..
2002 முதல் அடுத்த ஐந்தாண்டுகளும், 2007ம் ஆண்டு முதல் அதற்கடுத்த ஐந்தாண்டுகளுமாக தொடர்ந்து முதல்வராக இருந்த மோடி, அதையடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் முதல்வராக உருவெடுத்தார். இந்நிலையில்தான் அவரது கவனம் தேசிய அரசியல் பக்கம் திரும்பியது. பாஜகவில் வாஜ்பாய் ஓய்வுக்கு பிறகு வலிமையான தலைமையில்லாமல் இருப்பதை உணர்ந்த மோடி அந்த இடத்தை தானே நிரப்ப முடிவெடுத்து காய் நகர்த்த ஆரம்பித்தார்.

தோள் கொடுத்த ராஜ்நாத்சிங்
மோடியின் நோக்கத்திற்கு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். பாஜக நாடாளுமன்ற குழுவில் மோடிக்கு இடம் பெற்றுக்கொடுத்தது, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சார குழு தலைவராக்கியது என தேசிய நீரோட்டத்தில் கலக்க செய்ததில் ராஜ்நாத்சிங்கின் பங்கு அபாரமானது. இதன் உச்சபட்சமாக அத்வானி, சுஷ்மா போன்ற சீனியர் கோஷ்டிகளின் கடும் எதிர்ப்பை மீறி 2013ம் ஆண்டு செப்டம்பரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

ஆபரேசன் உ.பி.
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் நரேந்திரமோடி தனது முழு உத்வேகத்தையும் காண்பித்து தேர்தல் களப்பணிகளை தொடங்கிவிட்டார். இந்தியாவிலேயே அதிகமான தொகுதியை கொண்ட உத்தரபிரதேசத்தை வளைத்துவிட்டாலே பாதி வெற்றியை பெற்றதாகிவிடும் என்பதை மோடி உணர்ந்திருந்தார். ஆபரேசன் உ.பி என்றவகையில் ஒரு திட்டத்தை தீட்டி தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் அமித்ஷாவை உத்தரபிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக மாற்றினார்.

பாக்கெட்டில் பிகார்
அமித்ஷாவும் தனது பணியை செவ்வனே செய்தார். மேலும், உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் போட்டியிட மோடி முடிவெடுத்ததும், அந்த மாநிலத்தில் மோடி குறித்த அதிர்வை ஏற்படுத்ததான் என்று கூறப்படுகிறது. உபியின் அருகேயுள்ள பிகாரும் மோடியின் குறியாக இருந்தது. காரணம் அங்கு 40 தொகுதிகள் இருப்பதுதான். சொல்லி வைத்தாற்போல இரு மாநிலங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

சமூக வலைத்தள பங்கு
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக நிலவிய அதிருப்தியை மோடி சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதன் விளைவு அசாமில் பாஜக அபார வெற்றிபெற்று, அம்மாநில முதல்வரையே பதவி விலகச் செய்துள்ளது. தெற்கிலும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி மோடிக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மாநில பாஜ அரசால் ஏற்பட்ட அதிருப்தி மக்கள் கண்முன் இருந்து மறையாமல்தான் உள்ளது. ஆனால் மோடியின் அலை அதையெல்லாம் உருட்டி தள்ளிவிட்டது. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தை, மோடி அளவுக்கு முன்கூட்டியே புரிந்து வைத்திருந்த அரசியல் தலைவர் யாருமில்லை. அதனால்தான் சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் மோடியின் கொள்கை பரப்பு தளங்களாக அவரால் மாற்ற முடிந்தது.

ஆபரேசன் தமிழ்நாடு?
தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் மட்டுமே பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதையே மோடியும் எதிர்பார்த்திருப்பார் என்று நம்பலாம். இனிமேல் இம்மாநிலங்களிலும் மோடியின் ஆபரேசன் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.பாஜகவின் இரும்பு மனிதர், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் புகழ்பெற்ற அத்வானியால் கூட கடந்த தேர்தலில் காங்கிரசை வீழ்த்த முடியவில்லை. ஆனால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆறே மாதங்களில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டார் மோடி.












Click it and Unblock the Notifications