ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் தகவல் தெரிவிக்கனும்.. வருமான வரித்துறை அதிரடி
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் உடனே வங்கிகள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
டெல்லி: பொது மக்கள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் வங்கிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பொதுமக்கள் நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கி மற்றும் அஞ்சலக கணக்குகளில் செலுத்தலாம் என்றும், நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வருமானத்திற்கு அதிகமான பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் 200 சதவிதம் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் வருமான வரித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், வங்கிகளில் பொதுமக்கள் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் உடனே வங்கிகள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். இந்த உத்தரவு அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தனிநபர் டெபாசிட் வரம்பு ரூ 10 லட்சம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது