எல்லை அமைதிக்காக நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லி: எல்லைகளில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதைப்போல பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்த நாடுகளுடன் தொடர்ந்து எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையின், 53-வது எழுச்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா அடிக்கடி கேள்வி எழுப்புகிறது. எல்லையில் இந்திய பகுதிக்குள் நடத்தப்படும் கட்டுமானங்களுக்கு கூட அந்த நாடு அதிருப்தி தெரிவிக்கிறது.
அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சினைகளுக்கு அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். இந்திய-சீன எல்லை விவகாரத்தில் சர்ச்சை எழுந்தால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சீன அதிபரிடமும் மோடி வலியுறுத்தி உள்ளார்.
அந்தவகையில் சீனாவுடன் அமைதி ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காக எங்கள் நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எல்லையில் கவுரவத்துடன் கூடிய அமைதியையே நாங்கள் விரும்புகிறோம்.
பாகிஸ்தானின் போர்நிறுத்த அத்துமீறல்கள், சீனாவின் எல்லை சர்ச்சைகள் குறித்து அறியும் போது கவலையும், கோபமும் ஏற்படுகிறது. காஷ்மீர் எல்லையில் தீபாவளிக்கு முன்தினம் கூட பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. எங்கள் பண்டிகையை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
இந்த அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பதிலடி கொடுக்கும் திறனை பாகிஸ்தான் மறந்து விடக்கூடாது. எனவே எல்லையில் அத்துமீறும் விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.












Click it and Unblock the Notifications