ஐஎன்எஸ் சிந்து ரத்னா விபத்தின் சோகக் கதை- மற்றவர்களைக் காத்து உயிர் நீத்த கடற்படை அதிகாரிகள்!
டெல்லி: ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிர் நீத்த இரண்டு கடற்படை அதிகாரிகளின் கதை பெரும் சோகமாக உள்ளது.
இருவருமே அந்த நீர்மூழ்கிக் கப்பல் பழுதானது என்று தெரிந்தும் உயிருக்கு அஞ்சாமல் பணியாற்றியுள்ளனர். மேலும் விபத்துக்குப் பின்னர் கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்ற முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுள்ளனர்.
ஆனால் அனைவரையும் காப்பாற்றிய அவர்களால் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது.
கபிஷ் முவால், மனோரஞ்சன் குமார்
32 வயதான லெப்டினென்ட் கமாண்டர் கபிஷ் முவால், 30 வயதான மனோரஞ்சன் குமார் ஆகிய இருவரும் பிணமாக மீட்கப்பட்னர். இருவரும் தாங்கள் இருந்த பகுதியில் கபிணமாகக் கிடந்தனர்.
உடல் சிதிலமடைந்த நிலையில்
இருவரும் விஷ வாயு பரவிய அறைக்குள் சிக்கிக் கொண்டதாலும், தீயில் சிக்கிக் கொண்டதாலும் அவர்களது உடல் மிகவும் மோசமான முறையில் இருந்தது. அவர்களது உடலில் டிஎன்ஏ சோதனை நடைபெற்றுள்ளது.
சகோதரர் பெரும் வருத்தம்
முவாலின் சகோதரர் ஆசிஷ் இதுகுறித்துக் கூறுகையில், எனது சகோதரர் போரில் இறந்திருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்படி உயிரிழந்திருப்பது பெரும் வருத்தமாக உள்ளது என்றார்.
தகுதியே இல்லாத கப்பல்
சிந்து ரத்னா கப்பல் தகுதியே இல்லாத ஓட்டைக் கப்பல் என்று ஆசிஷிடம் பலமுறை கூறியுள்ளாராம் முவால். இதுகுறித்து ஆசிஷ் கூறுகையில், இந்தக் கப்பல் மிகவும் குறைபாடுகளுடன் இருப்பதாக என்னிடம் பலமுறை கூறியுள்ளார் முவால். எல்லோருக்குமே இது தெரியும். கடைசி முறையாகத்தான் இந்தக் கப்பலை சோதிக்க அனுப்பினர். ஆனால் அது இருவரின் உயிரைப் பறித்து விட்டது என்றார் அவர்.
பேட்டரியில் கசிவு
கப்பலில் இருந்த ஒரு பேட்டரியில் ஏற்பட்ட கசிவுதான் தீவிபத்துக்குக் காரணம் என்கிறார்கள். மேலும் முவால் மற்றும் குமார் ஆகியோர் இருந்த அறைக்குள் தீயை அணைக்க வைத்திருக்கும் தீத்தடுப்பான் கருவியிலிருந்து வெளியான விஷ வாயுவும் அறைக்குள் புகுந்து விட்டதால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வெளியே தள்ளிக் காத்தனர்
தீவிபத்தும், விஷ வாயுவும் பரவியதைத் தொடர்ந்து தங்களது அறைக்குள் இருந்தவர்களை வேகமாக வெளியே தள்ளியுள்ளனர் முவாலும், குமாரும். அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளனரா என்றும் பார்த்துள்ளனர். அப்போதுதான் இவர்கள் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.