ஜெ. விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யும் ஆச்சார்யாவின் முடிவை ஆதரிக்கும் 'ப.சி.'
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பரிந்துரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மேல் முறையீடு செய்யப்பட வேண்டியது என்பதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆகியோர் வலுவான கருத்துகளை தெரிவித்துள்ளனர் என்று நம்புகிறேன். நான் ஆச்சார்யா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அவர் செய்வது சரியே என்று நினைக்கிறேன் என்றார்.
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு ஆச்சார்யாவும், அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமாரும் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நேரத்தில் சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது பற்றி சிதம்பரம் கூறுகையில்,
தீர்ப்பு பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தெரிவித்தபோது கூட அது பற்றி நான் கருத்து தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் அவர் விடுவிக்கப்பட்டது பற்றியும் நான் எதுவும் கூறப் போவது இல்லை என்றார்.