ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய வேண்டும்: சொல்வது கர்நாடக பாஜக மாஜி துணை முதல்வர்
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்று கர்நாடக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரப்பா இன்று கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஜெயலலிதா மீதுள்ள புகார் சிறு தொகை தொடர்பானது கிடையாது. கோடிக்கணக்கான ரூபாய் தொடர்புள்ள முறைகேடு புகார் அவர் மீது உள்ளது.

ஊழல் வழக்கில் எளிதில் விடுதலை நிகழுமானால், ஊழலை செய்வோருக்கு அச்சம் போய்விடும். நாட்டில் ஊழலும், முறைகேடுகளும் பெருகி மக்கள் அவதிப்படுவார்கள்.
சட்ட வல்லுநர்கள், கர்நாடக அரசை மேல்முறையீடு செய்ய கேட்டபிறகும், கர்நாடக அரசு காலம் கடத்துவது ஏன் என்று புரியவில்லை. மேல்முறையீடு செய்யாவிட்டால், காங்கிரஸ் கட்சி ஏதோ பெரிய தவறு செய்துள்ளது, எனவேதான், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய தயங்குகிறது என்று மக்கள் சந்தேகப்படுவார்கள். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
தமிழக பாஜக ஜெயலலிதாவிடம் நெருங்கி வருகிறது. அதன் அடையாளமாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா போன்றோர் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அகில இந்தியத் தலைமையும் கூட நெருக்காமாகவே உள்ளது. மோடியே, ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இல.கணேசனும், இந்த வழக்கில் மேல்முறையீடு தேவையில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அப்பீல் தேவை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications