ஜெ. இறந்த சோகத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டு வர பிரார்த்தனை: சச்சின் இரங்கல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இழந்துவாடும் தமிழக மக்கள் அதிலிருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இழந்துவாடும் தமிழக மக்கள் அதிலிருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் கட்சி பேதம் இன்றி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மறைவு குறித்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அனைவராலும் அவர் விரும்பப்பட்டவர். இந்த இழப்பிலிருந்து மீண்டுவர இறைவன் அவர்களுக்கு சக்தி அளிப்பார் என
நம்புகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.