ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்திருக்க வாய்ப்பு: கர்நாடக மருத்துவ அதிகாரி
பாகல்கோட்டை: கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தகட்டி. இவரது மகன் திம்மண்ணா (6). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தோட்டத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்துவிட்டான்.

இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை சிறுவனை மீட்க தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக போர்வெல் அருகே பெரிய பள்ளம் பொக்லைன் உதவியால் தோண்டப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 120 அடி ஆழத்துக்கு பொக்லைன் தோண்டியுள்ளது. 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிறுவனை மீட்க வந்த மதுரையை சேர்ந்த மணிகண்டன் தலைமையிலான ரோபோ மீட்பு குழுவினராலும் சிறுவனை மீட்க முடியவில்லை. சிறுவனுக்கு மேலே மணல் விழுந்து அடைத்துக் கொண்டிருப்பதால், ரோபோவின் கரங்கள் சிறுவனை கவ்வி பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியுள்ளது. எனவே சிறுவன் பலியாகியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் மூச்சு திணறி சிறுவன் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி பி.டி.கித்தூர் தெரிவித்தார். பொக்லைன் மூலம் தோண்டப்படும் பள்ளத்தில் சுரங்கம் அமைத்துதான் சிறுவனின் உடலை கைப்பற்ற முடியும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications