'ஈ தலே நோவே பேக்கில்லா..' ஜெ.வை தமிழக சிறைக்கு மாற்ற கோரப்போகும் கர்நாடகா!
பெங்களூர்: தமிழகத்துடனான இந்த தலை வலியே வேண்டாம் என்பதால், ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கைவிடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த மாதம் 27ம்தேதி முதல் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து அந்த வழக்கு விசாரிக்கப்பட்டதால், நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட சிறையில் இருக்க வேண்டியது ஜெயலலிதாவுக்கு கட்டாயமாகிறது.

ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக அரசு சதி செய்வதாக அதிமுக நிர்வாகிகள் செய்திகளை பரப்பி வருகின்றனர். இது கர்நாடக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத கர்நாடக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது: "இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இந்த வழக்கில் சம்மந்தமே இல்லாமல் கர்நாடக அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
சிறை உணவை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியதால் வீட்டு சாப்பாட்டை சாப்பிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது சிறை விதிகளுக்கு புறம்பானது. தமிழக முன்னாள் முதல்வர் என்பதற்காக நாங்கள் விதியை வளைத்துள்ளோம்.
ஆனால் வெளியில் இருந்து வரும் உணவால் ஜெயலலிதா உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அப்போது நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டி வரும். வெளியில் இருந்து வரும் உணவுக்கு தடை விதித்தாலும் கர்நாடக அரசு செய்தது தவறு என்பார்கள், உணவை கொடுத்தாலும் தவறு என்பார்கள். இந்த தர்ம சங்கடத்தை கர்நாடகா விரும்பவில்லை.
காவிரி உள்ளிட்ட விவகாரங்களால் கர்நாடகா மீது தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இந்த சூழ்நிலையில், ஜெயலலிதாவை எங்கள் மாநிலத்தில் வைத்திருப்பது பெரும் சிரமம். எனவே வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா கோரிக்கை விடுக்கும்" என்றார் அழுத்தம் திருத்தமாக.
ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். ஆயினும் இதில் கர்நாடக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதால் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் உதவியுடனே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications