கர்நாடகாவில் தொங்கு சட்டசபையா? - ஆட்சியை பிடிக்க அலைமோதும் கட்சிகள்
கர்நாடகாவில் இம்முறை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு இம்முறை பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா மாநில சட்டசபைக்கு 5 ஆண்டுக்கான பதவி காலம் வருகிற மே மாதம் 28ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 123 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ஆட்சியை தக்கவைக்க முயற்சி
இந்த தடவையும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. ஆனால் காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைபற்ற வேண்டும் என்பதில் பாஜக மூத்த தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.

பலமான போட்டி
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் காங்கிரசும், பாஜகவும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன. பாஜக தலைவர் எடியூரப்பா பரிவர்த்தனை யாத்திரை என்ற பெயரில் தொகுதி வாரியாக சென்று கொண்டிருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவரும் யாத்திரைகளை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகா யாருக்கு?
அனைத்து கண்களும் கர்நாடகா சட்டசபை தேர்தலை நோக்கியே உள்ளன. இம்முறை சட்டசபை தேர்தலில் வென்று விதான சவுதாவில் ஆளும்கட்சியாக அமரப்போவது யார் என்பதே அம்மாநில மக்களின் கேள்வி.
கர்நாடகத்தை பொறுத்தவரையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு மீது பெரியதாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதனால் சித்தராமையா ஆட்சிக்கு எதிரான அலை என்பது பெரிதாக இல்லை. இது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது.

மதசார்பற்ற ஜனதா தளம்
மாநில கட்சியான தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஆட்சியை பிடிப்போம் என்று சூளுரைத்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறது. கர்நாடகாவில் மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக களம் இறங்கியுள்ளன.

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை
இதுவரை வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை வரலாம் என்றும் சில கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அரசியல் வியூகம்
அதுபோன்ற ஒரு நிலை வந்தால், மதசார்பற்ற கொள்கையை கொண்டுள்ள காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை தடுக்க பாஜக இப்போது இருந்தே வியூகம் வகுக்கத் தொடங்கி இருக்கிறது.

அரசியல் வானிலை
கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஒன் இந்தியாவிற்கு கருத்து கூறியுள்ள டாக்டர் சாஸ்திரி, இம்முறை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளார். கர்நாடகாவில் 1983 ஆம் ஆண்டும் 2004ஆம் ஆண்டும் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 1983 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கும் இடையேதான் போட்டி ஏற்பட்டது.

பாஜக ஆளும் கட்சி
2004ஆம் ஆண்டு இரு கட்சி போட்டி 3 கட்சி போட்டியாக மாறியது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் பாஜகவும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2009 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து முதன் முறையாக ஆளுங்கட்சியாக விதான சவுதாவிற்குள் அடியெடுத்து வைத்தது பாஜக.

2018 சட்டசபை தேர்தல்
2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இம்முறை இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் கோதாவில் உள்ளது எனவே 2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் சூழ்நிலை நிலவுவதாக கணித்துள்ளார் டாக்டர் சாஸ்திரி.












Click it and Unblock the Notifications