"சிக்கிய டாக்குமெண்ட்" கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூத்த டாக்டர் செய்த காரியம்! சிபிஐ கிடுக்குப்பிடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மிக முக்கிய டாக்குமெண்ட் ஒன்றை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடந்தன.

முதலில் கொல்கத்தா போலீசார் இந்த வழக்கை விசாரித்த நிலையில், அவர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தைக் கிளப்பியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
புதுப்பிக்கும் பணி: இந்தளவுக்குக் கொடூரமான குற்றம் நடந்துள்ள நிலையில், அந்த செமினார் ஹாலுக்கு அருகே உள்ள இடத்தை அவசர அவசரமாகப் புதுப்பிக்கும் பணி நடந்துள்ளது. ஆதாரத்தை அழிக்கவே இந்த புதுப்பிக்கும் பணி நடந்ததாகப் பலரும் சாடினர். இதற்கிடையே இது தொடர்பாக சில முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாக சிபிஐ தரப்பினர் கூறியுள்ளனர்..
ஆகஸ்ட் 13ம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் மாநில பொதுப்பணித் துறை ஊழியர்கள் குற்றம் நடந்த செமினார் ஹாலை ஒட்டி இருந்த அறையில் மறுசீரமைப்பு பணிகளைச் செய்துள்ளனர். அதாவது குற்றம் நடந்த ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக அங்கே மறுசீரமைப்பு பணிகளைச் செய்துள்ளனர்.
நிறுத்தம்: இருப்பினும், இது தொடர்பான தகவல் கிடைத்த உடன் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மிகப் பெரியளவில் மாணவர்கள் திரண்டதால் சீரமைப்புப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவே முக்கிய ஆவணத்தை இப்போது சிபிஐ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சிக்கிய டாக்குமெண்ட்: அதாவது இந்த சீரமைப்பு பணிகள் குறித்து நீதிமன்றமும் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு மருத்துவமனை தரப்பினர், "இது முன்னதாகவே திட்டமிடப்பட்ட சீரமைப்பு பணி. குற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை" என்றே விளக்கமளித்தனர். ஆனால், சிபிஐ அதிகாரிகள் இப்போது மீட்டுள்ள ஆவணத்தில், பயிற்சி மருத்துவரின் உடல் மீட்கப்பட்ட மறுநாள், அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி தான் மருத்துவமனை வளாகத்தைச் சீரமைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டை சிபிஐ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மருத்துவமனையில் நிர்வாக பதவியில் இருந்த மூத்த மருத்துவர் ஒருவரே இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார். இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட நபர்களில் அந்த குறிப்பிட்ட மருத்துவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த உத்தரவைப் பிறப்பித்த நபர் ஆர்ஜி கார் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சர்ச்சைக்குரிய சந்தீப் கோஷுக்கு நெருக்கமான நபராக அறியப்படுகிறார்.
மூத்த மருத்துவர்: குற்றம் நடந்த மறுநாள் மூத்த மருத்துவர் எதற்காக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.. அவர் சொந்தமாக இந்த உத்தரவை அளித்தாரா அல்லது யாருடைய ஆலோசனையைக் கேட்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தாரா என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், பயிற்சி மருத்துவரின் உடலைப் பாதுகாக்காமல் அவசர அவசரமாகத் தகனம் செய்தது ஏன் என்பது குறித்து இப்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உடலை உடனடியாக தகனம் செய்ய அறிவுறுத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications