அமெரிக்காவில் பொறியாளர் பணியை உதறிவிட்டு... இந்திய ராணுவத்தில் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன்
அமெரிக்காவில் கிடைத்த வேலையை உதறி தள்ளிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து அதிகாரி ஆனார் தெலுங்கானா இளைஞர் பர்னானா யாதகிரி.
ஹைதராபாத்: ஐஐஐடியில் படித்து அமெரிக்காவில் கிடைத்த வேலையையும் உதறிவிட்டு நாட்டுக்கு சேவை செய்வதற்காக இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார் கூலித் தொழிலாளியின் மகன் பர்னானா யாதகிரி.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் பர்னானா குணைய்யா. சிமென்ட் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு ரூ. 100 மட்டுமே கூலியாக பெற்று வந்தார்.
இவரது மகன் பர்னானா யாதகிரி. வறுமையிலும் கஷ்டப்பட்டு படித்த யாதகிரி ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து படித்து மென்பொருள் பொறியாளராகினார்.
அமெரிக்க வேலையை உதறினார்
பின்னர் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் வேலை கிடைத்தது. எனினும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்க வேலையை உதறித் தள்ளினார்.
வெள்ளிப் பதக்கம்
பின்னர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி கழகத்தில் பயிற்சியை நிறைவு செய்த இவர், வெள்ளிப் பதக்கமும் வென்றார். இதைக் கண்டு அவரது தந்தை பர்னானா குணைய்யா ஆனந்த கண்ணீர் விட்டார்.
தந்தை கூலித் தொழிலாளி
இதுகுறித்து யாதகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது தந்தை கூலித் தொழிலாளி. போலியோவால் பாதிக்கப்பட்ட எனது தாய் அலுவலகங்களில் மேசைகளை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். இருவரும் சேர்ந்து என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர்.
நாட்டுக்கு சேவை செய்வேன்
எனது தந்தை மிகவும் எளிமையானவர். நான் ராணுவத்தில் சிப்பாயாக பணி சேர்ந்துள்ளதாக எனது தந்தை கருதினார். அதிக வருமானம் கிடைக்கும் பணியை உதறி நான் தவறு செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் நான் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளேன். எனது மனசாட்சிபடி நாட்டுக்கு சேவை செய்வேன் என்றார் யாதகிரி.
யாதகிரிக்கு குவியும் பாராட்டுகள்
ஏசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பான சூழலில் வேலையும், கை நிறைய ஊதியமும் கிடைத்த போதிலும் அதை உதறிவிட்டு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ராணுவத்தில் சேர்ந்துள்ள யாதகிரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.