அனைத்து தரப்பினரும் வளர்ச்சி அடையவே 10 சதவீதம் இடஒதுக்கீடு… மோடி விளக்கம்
Recommended Video
சோலாப்பூர்:அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப் பட்டதோடு அவையும் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
ஆனால் ஒதுக்கீடு மசோதா குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. வாய்ப்புகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மசோதாவை நிறைவேற்றுவதற்காக ராஜ்யசபா கூடுதலாக ஒருநாள் கூடியிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசி வருகின்றன என்றார் மோடி.