Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்கண்ட் தனி மாநிலம் கேட்டு அதிர வைத்தவர்! யார் இந்த சிபு சோரன்? ஹேமந்த் சோரன் பின்புலம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவாவதற்குக் காரணமாக இருந்த சிபு சோரன் தொடங்கியதுதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. இது பாஜகவை விட பழமையான கட்சி. மேலும் இந்தியாவின் பழமையான தலைவர்களில் ஒருவர்தான் ஹேமந்த் சோரனின் அப்பா சிபு சோரன். இன்று பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் ஜே.எம்.எம். கட்சியின் வரலாறு என்னவென்று தெரியுமா?

பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார் ஹேமந்த சோரன். சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர், "பாஜக ஜார்கண்ட் மாநில பழங்குடியினர்களை முதல்வராகப் போட்டு ரப்பர் ஸ்டாம்பு போல் பயன்படுத்தி வருகிறது" என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு காவிக் கட்சி பாஜக இந்த மாநிலத்திலிருந்து சுத்தமாகத் துடைத்து எறியப்படும்" என்று கர்ஜித்திருந்தார்.

Hemant Soren Jharkhand

இவர் வெளியே வந்தது முதல் பாஜகவுக்கு எதிராக வேகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளார். நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை முதலில் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக உடனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆகவே விசாரணைக்கு ஆஜரானார் ஹேமந்த். அதனையடுத்து மறுபடியும் விசாரணைக்கு ஆஜராகச் சொன்னது அமலாக்கத்துறை. ஆனால் இவர் ஆஜராகாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார். இவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அப்போது அங்கே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதனை அடுத்து ராஞ்சிக்கு திரும்பிய ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அமலாக்கத்துறை 6 மணிநேர விசாரணைக்குப் பின்பு கைது செய்தது. ஆகவே முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் சாம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் நில மோசடி வழக்கில் 6 மாதங்களாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த அவர் பாஜகவை மிகக் கடுமையாக விளாசித் தள்ளி வருகிறார். "பாஜகவின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் காலம் வந்துவிட்டது. வரும் நாட்களில் ஜார்கண்டில் இருந்து பாஜக அழிக்கப்படும்" என்று அவர் கூறி வருகிறார்.

யார் இந்த ஹேமந்த் சோரன்? : ஜார்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியான சிபு சோரனின் 2வது மகன் தான் இந்த ஹேமந்த் சோரன். இவருக்கு முன்னால் பிறந்தவர் துர்க்கா சோரன். இவருக்குப் பின்னால் பிறந்தவர்கள் பெசண்ட் சோரன். அஞ்சலி சோரன். ஆக, சிபு சோரனுக்கு மொத்தம் 4 பிள்ளைகள். இப்போது சிபு சோரன் முதுமையின் காரணமாக தீவிர அரசியலிலிருந்து விலகி இருக்கிறார். ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாக அவர் ராஜ்யசபா உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார்.

இவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 1972இல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 51 ஆண்டுகள் பழமையான கட்சி இது. இன்னும் சொல்லப்போனால் பாஜகவைவிடப் பழமையான கட்சி. இதன் தலைவராக சிபு சோரன் தான் இருந்து வருகிறார். செயலாளராக ஹேமந்த் இருந்து வருகிறார்.

இந்தக் கட்சியின் சார்பாக 2005 தொடங்கி 2010 வரை மாநிலத்தின் முதல்வராக சிபு சோரன் இருந்துள்ளார். முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்ற போது வெறும் 10 நாள்கள்தான் அந்தப் பதவியிலிருந்தார் சிபு. இன்னும் அழுத்தமாகச் சொல்லப் போனால், சிபுவின் ஆட்சிக்காலம் மிகமிக குறைவானது. மொத்தமே அவர் 308 நாட்கள்தான் ஆட்சியிலிருந்துள்ளார்.

அவருக்குப் பின்பாக 2013 ஹேமந்த் சோரன் முதல்வராக முதன்முதலாகப் பதவியேற்றார். மொத்தம் 4 ஆண்டுகள் 184 நாட்கள்தான் இந்தப் பதவியில் இவரால் தொடர முடிந்தது. ஆளும் கட்சியாக இருந்த காலத்தைவிட எதிர்க்கட்சியாக நிறையக் காலங்கள் இருந்துள்ளார் இவர்.

ஜார்கண்ட் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்று அரசியல் களத்திற்குப் புகுந்துதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. அதற்கு முன்பு பீகாரின் ஒரு பகுதியாக இம்மாநிலம் இருந்தது. ஜார்கண்ட்டில் மொத்தம் 32 வகையான பழங்குடி மக்கள் உள்ளனர். இந்த மக்களின் படைத்தளபதியாகப் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திகழ்ந்த வீரன் தான் பிர்சா முண்டா. ஜே.எம்.எம் கட்சி தேசியவாதம், சமத்துவம் ஆகிய கொள்கைகளை லட்சிய முழக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது இக்கட்சி 'இந்தியா’ கூட்டணியில் உள்ளது.

இந்தக் கட்சி உருவாவதற்கு முன்னால் ஜார்கண்ட் கட்சி இந்தக் கட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட பழமையான கட்சியாகும். அதாவது 1949இல் தொடங்கப்பட்டது. இந்த மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் மரங் கோம்கே ஜெய்பால் சிங் முண்டாவால் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக ஜார்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததால் இக்கட்சி நன்றாக மக்கள் மத்தியில் வளர்ந்தது.

மேலும் பழங்குடி மக்களைத் தாண்டி பொதுவானவர்களையும் இக்கட்சி ஒருங்கிணைத்தது. ஜார்க்கண்ட் கட்சி 1952, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது. இக்கட்சியை ஜெய்பால் சிங் முண்டா என்பவர்தான் நிறுவினார். இவர் ஒரு எழுத்தாளர், விளையாட்டு வீரர். இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராக இருந்தவர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது இந்திய ஃபீல்ட் ஹாக்கி அணியின் தலைவராக இருந்தார்.

இந்தக் கட்சி உடைந்த பிறகுதான் 1969களில் சொனாட் சந்தால் சமாஜ் அமைப்பின் நிறுவனராக இருந்து வந்த சிபு சோரன், பழங்குடி மக்களின் கல்வி, சமூக மேம்பாடு பற்றிப் பேசியும் போராடியும் வந்தார். அவருக்கு எம்.என்.ராய் உட்படப் பல தேசிய தலைவர்களுடன் ஒரு தொடர்பு உருவானது. அதன் பின்னர் இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைக் கட்டமைத்தார்.

படிப்படியாகக் கட்சி வளர்ந்து தேசிய அளவில் பிரதமரை நிர்ணயிக்கும் அளவுக்கு வலிமை பெற்றது. 1991இல் நரசிம்மராவ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தபோது சிபு சோரனின் எம்பிகள் அரசை ஆதரித்து வாக்களிக்க லட்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே சிபு இந்திய அளவில் பிரபலமானார்.

பிறகு இந்த வழக்கிலிருந்து இவரது கட்சி எம்பிகள் போராடி விடுதலைப் பெற்றனர். ஒரே சமயத்தில் சிபு சோரனின் உதவியாளர் படுகொலை நடைபெற்றது. அதில் சிபு சோனுக்கு தொடர்பு உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

ஒரு பக்கம் வழக்கு, மற்றொரு பக்கம் ஜார்கண்ட் தனிமாநிலம் கேட்டுப் போராடும் தலைவர் என இரண்டு முகங்களைக் கொண்டிருந்தார் சிபு. 1994இல் பீகார் முதல்வர் லாலு தனி மாநிலம் வழங்குவது தொடர்பாகக் குழு அமைத்தார், அதன் தலைவராக சிபு சோரனை நியமித்தார். 2000 ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பீகாரிலிருந்து பிரிந்து ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவெடுத்தது. அன்று பிர்சா முண்டாவின் பிறந்தநாள். மாநிலத்திற்கு முதலில் 'வனாஞ்சல்’ என்றே பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதியில் ஜார்கண்ட் என்று பெயர் வைக்கப்பட்டது.

இப்படி ஜார்கண்ட் மாநில தனியாக உருவாகக் காரணமாக இருந்த சிபு சோரன் கட்சியின் வாரிசுதான் இந்த ஹேமந்த் சோரன். தனி மாநிலத்தையே உருவாக்கிய ஒரு கட்சியின் தலைவர், இந்தக் காவிக் கட்சியைச் சமாளிப்பதா ஒரு விசயம்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+