மத்திய பிரதேசத்தில் இந்தியாவை துவம்சம் செய்த பாஜக? ஒட்டுமொத்தமாய் அள்ளிட்டாங்க..இந்தியா டுடே கணிப்பு
போபால்: லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவே வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இதயம் என அழைக்கப்படும் மத்திய பிரதேச மாநிலத்தில் 29 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து தேசிய கட்சிகளும், சமாஜ்வாதி ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகளும் 95 சிறிய கட்சிகளும் இருக்கின்றன. ஆனாலும் பல ஆண்டுகளாக போட்டி பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் மட்டுமே இருக்கிறது.

கடந்த காலத்தில் பாஜகவும் காங்கிரசும் தனித்தே போட்டியிட்ட நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கஜுராஹோ தொகுதியில் மட்டும் சமாஜ்வாதி போட்டியிடுகிறது. அதே நேரத்தில் பாஜக இந்த தேர்தலிலும் தனித்தே களம் கண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி 28 லிருந்து 29 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இந்தியா கூட்டணி பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 3 கோடியே 65 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் 58 சதவீத வாக்குகளை பாஜக அள்ளியது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜக 27 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலிலும் மத்திய பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications