இறுதி கட்ட தேர்தல்: மோடி, கேஜ்ரிவால் மோதும் வாரணாசி உட்பட 41 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்கு பதிவு 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 7ந் தேதி தொடங்கி மே 12ந் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 7ந் தேதி நடைபெற்றது. இதில் அஸ்ஸாமில் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது.
2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 9ந் தேதி நடந்தது. இதில் 7 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடந்தது. 3வது கட்டமாக ஏப்ரல் 10ந் தேதி நடந்த தேர்தலில் 91 தொகுதிகளுக்கும், 12ந் தேதி நடந்த 4ம் கட்ட தேர்தலில் 7 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது.
5வது கட்டமாக 121 தொகுதிகளில்..
5வது கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. இதில் 121 தொகுதிகளில் வாக்கு பதிவு நடந்தது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக
கடந்த மாதம் 24ந் தேதி நடந்த 6வது கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 117 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்றது.
7வது கட்டமாக 89 தொகுதிகளில்..
ஏப்ரல் 30ந் தேதி நடந்த 7வது கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற்றது.
8வது கட்டமாக 64 தொகுதிகளில்..
எட்டாவது கட்டமாக ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதி உள்பட 64 தொகுதிகளுக்கு கடந்த 7ந் தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது.
இறுதி கட்ட வாக்குப் பதிவு
தற்போது கடைசி கட்டமாக உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 41 தொகுதிகளுக்கு நாளை வாக்கு பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
மோடி- கேஜ்ரிவால்
நாளைய வாக்குப் பதிவு நடைபெறும் வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.
3 மாநிலங்களில் 41 தொகுதிகள்...
இதில் பீகாரில் 6 தொகுதி, உத்தரபிரதேசத்தில் 18, மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு பதிவு நடைபெற உள்ள 3 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.