காந்திநகர் தொகுதியில் போட்டியிடமாட்டேன் என எப்ப சொன்னார் அத்வானி? கேட்கிறார் மகள் பிரதீபா
அகமதாபாத்: குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடமாட்டேன் என்று தமது தந்தை அத்வானி ஒருபோதும் அடம்பிடிக்கவில்லை என்று அவரது மகள் பிரதீபா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் காந்திநகரில் அத்வானி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்தது. ஆனால் மோடி ஆதரவாளர்கள், காந்திநகரில் தம்மை தோற்கடித்துவிடுவார்கள் என்று அஞ்சி தமக்கு போபால் லோக்சபா தொகுதியை ஒதுக்க வலியுறுத்தினார் அத்வானி.
பாஜக மேலிடமோ, காந்திநகரில்தான் போட்டியிட்டாக வேண்டும் என்று அத்வானிக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் அத்வானி வேறுவழியின்றி காந்திநகர் தொகுதியில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இத்தொகுதியில் தற்போது அத்வானியின் மகள் பிரதீதாபாதான் தந்தைக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதீபா, அத்வானி ஒருபோதும் காந்திநகர் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவே இல்லை. எங்களுக்கும் குஜராத்துக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. இது எங்களது தாய்வீடு என்றார்.
மேலும் ஏப்ரல் 2-ந் தேதியன்று காந்திநகரில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் அத்வானி தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் பிரதீபா கூறினார்.