ராஜ்யசபாவில் அமளி துமளி... லோக்சபாவில் இரங்கல்... நாள் முழுவதும் ஒத்திவைப்பு..
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளியுடன் தொடங்கியுள்ளது. ராஜ்யசபாவில் எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பம் காரணமாக அவை இன்று மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பின்னர் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ராஜ்யசபா தொடங்கியதும், புதிய எம்.பி.யாக எம்.ஜே.அக்பர் பொறுப்பேற்றார். எம்.ஜே.அக்பர் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பாஜக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். தொடர்ந்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற சானியா மிர்சா, லியான்டர் பயஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

லலித் மோடி விவகாரம்
ராஜ்யசபாவில் லலித் மோடியின் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். லலித் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு உதவிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை பதவியிலிருந்து நீக்காதது ஏன் அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
வெளிப்படைத்தன்மை தேவை
ஒரு தலைமறைவு குற்றவாளிக்கு உதவியவர் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியா என்று கேட்ட ஆனந்த் சர்மா, வெளிப்படத்தன்மை பற்றி பேசும் மோடி, இவ்விசயத்தில் பொய்யை மட்டும் பேசுவதாகவும் கடுமையாக சாடினார்.
அருண் ஜெட்டி விளக்கம்
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இவ்விவகாரம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் பதில் அளிப்பார் என்றும், விவாதிக்க தயார் என்றும் கூறினார்.
எதிர்கட்சிகள் அமளி
ஆனால் இதை ஏற்க மறுத்து அவையின் மையப்பகுதியில் நின்று காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால்,இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் இரண்டு மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.
கூச்சல், குழப்பம்
2மணிக்கு அவை கூடியதும் மீண்டும் லலித்மோடி விவகாரம், வியாபம் முறைகேட்டை எதிர்கட்சிகள் கையில் எடுத்தனர். இதனால் மேலும் கூச்சல் குழப்பம் ஏற்படவே அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்கட்சிகள் தயாரில்லை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரு ஜேட்லி, "லலித் மோடி - சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை; அவர்களுக்குத் தேவை அமளி, அவை முடக்கம்தான் என்றார்.
அரசு எதற்கும் தயார்
அரசு எந்த வகையான விவாதத்துக்கும் தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினரோ கேள்வி நேரத்தை முடக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் அவையில் விளக்க அறிக்கை அளிப்பார் என்றுகூட நான் கூறினேன். அதையும் எதிர்க்கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் நோக்கமும், விருப்பமும் அவை முடக்கமே" என்றும் அருண் ஜெட்லி கூறினார்.
லோக்சபாவில் இரங்கல்
இதனிடையே இன்று லோக்சபா தொடங்கியதும் முதலில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் லோக்சபாவை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
பிரதமர் நம்பிக்கை
பிரதமர் நம்பிக்கை முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் பேசிய போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து எம்.பி.க்களும் கட்சி பேதமின்றி நல்ல முடிவுகளை எட்ட ஒத்துழைப்பர் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications