உழைப்பே உயர்வை தரும்.. 24 கிமீ சைக்கிளில் சென்று படித்த 15 வயது மாணவி.. 10-ஆம் வகுப்பில் அபாரம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி தனது பள்ளிக்கு தினமும் 24 கிலோ மீட்டர் தூரம் சென்று வந்த மாணவி பட்ட கஷ்டத்திற்கான பலனை பெற்று விட்டார். ஆம் 10ஆம் வகுப்பு தேர்வில் 98.5 சதவீதம் மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.
பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷினி பதௌரியா (15). இது 1200 பேர் வசித்து வரும் சிறிய கிராமம் ஆகும். இங்கிருந்து மேஹ்கான் நகர் 12 கி.மீ. தூரம் உள்ளது.
இங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார் ரோஷனி. அஜ்னோல் கிராமம் முதல் மேஹ்கானுக்கு பேருந்து வசதி இல்லாததால் அவர் தினந்தோறும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்தார்.
நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம் ஏன்...? -மு.க.ஸ்டாலின் கேள்வி
வீடு
பள்ளி போக 12 கி.மீ., வீடு திரும்ப 12 கி.மீ. என மொத்தம் 24 கி.மீ. தூரம் பயணித்து வந்தார். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை என பாராமல் அவர் தினமும் பள்ளிச் சென்று வந்தார். அவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும். வீடு திரும்ப முடியாத சூழல் ஏற்படும்.
கிராமத்திற்கு பெருமை
அந்த நேரங்களில் அவரது உறவினர் வீடுகளில் தங்கி வெள்ளம் வடிந்தவுடன் வீடு திரும்புவார். சில நேரங்களில் அவர் வீடு திரும்ப நீண்ட நாட்கள் கூட ஆகலாம். பட்ட கஷ்டம் வீணாகாது என்று சொல்வார்கள். உழைப்பே உயர்வை தரும் என்பார்கள். அந்த வகையில் ரோஷிணி கஷ்டப்பட்டு படித்து தற்போது வெளியாந 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.5% மதிப்பெண்களை பெற்று அந்த கிராமத்திற்கே பெருமை தேடித் தந்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி
இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில் தான் நன்கு படித்து ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆட்சியரால் பல நல்ல பணிகளை செய்ய முடியும் என கேள்விப்பட்டுள்ளேன். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் ஆட்சியராகி பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் தெரிவித்தார். ரோஷிணி கணக்கு மற்றும் அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மற்ற பாடங்களில் 96 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
ரோஷிணி
11-ஆம் வகுப்பில் கணிதப் பாடம் எடுத்து படிக்க விரும்புகிறார் ரோஷிணி. இதுகுறித்து ரோஷிணியின் தந்தை புருஷோத்தமன் கூறுகையில் 36 வயதாகும் நான் ஒரு விவசாயி. எனது 3 பிள்ளைகளுமே படிப்பில் கெட்டி. ஆனால் எனது மகள் பெருமைப்படுத்திவிட்டாள். இந்த பகுதியில் இதுவரை யாரும் இத்தகைய மதிப்பெண்களை பெறவில்லை. ரோஷிணியில் பெரிய படிப்புகளை படித்து பெரு நகரங்களில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்றார்.
இளைய மகன்
இவரது மூத்த மகன் 12-ஆம் வகுப்பும் இளைய மகன் 4ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். குடும்பத்தில் கஷ்டங்கள் இருந்த போதிலும் தனது மகளின் கல்வியை நிறுத்த வேண்டும் என அவர் நினைத்ததே இல்லை. பேருந்து வசதி இல்லாததால் பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டார்கள். எனினும் ரோஷிணி பல்வேறு கஷ்டங்களை கடந்து படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.