ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்! பஹல்காம் தாக்குதல்.. சந்தேக அடிப்படையில் ஒருவர் கைது
ஸ்ரீநகர்: கடந்த வாரம் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் தீவிரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தாக்குதல் தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட வரைபடத்தின் அடிப்படையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த பஹல்காம் தாக்குதல் நாட்டையே உலுக்கிப் போடுவதாக இருந்தது. அங்குச் சுற்றுலாவுக்குச் சென்ற அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டனர். பைசரன் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் இறங்கிய தீவிரவாதிகள், அப்பாவி பொதுமக்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், விசாரணையைத் தொடங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் இருந்து தகவலைத் திரட்டி யார் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பது குறித்த வரைபடத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். தொடர்ந்து தாக்குதல் நடத்தியோரின் போட்டோக்களும் வெளியிடப்பட்டது.
நாடு முழுக்க உள்ள ஏர்போர்ட், துறைமுகங்களுக்கு இந்தத் தீவிரவாதிகளின் படங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே காஷ்மீரில் சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்திற்குப் பயணி ஒருவர் வந்துள்ளார். அவரது முகம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் வரைபடத்துடன் ஒத்துப் போய் இருந்துள்ளது.
இதையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வைத்து அந்த நபரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தனக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற அவர், ஒரு படப்பிடிப்பிற்காக சண்டிகருக்குச் செல்லும் படக் குழுவில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications