கன்னடம் பேச தெரியாது என்றதற்காக, மணிப்பூர் மாணவர் மீது பெங்களூரில் தாக்குதல்
பெங்களூர்: கன்னடம் பேசத் தெரியவில்லை என்பதற்காக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த மாணவ சங்க தலைவர் பெங்களூரில் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் டி.மைக்கேல் லாம்ஜதாங் ஹோகிப் (26). நேற்று இரவு, பெங்களூர் புறநகரான, கனகபுரா சாலையிலுள்ள கொத்தனூர் என்ற பகுதியில், தனது நண்பர்களான கம்கோலன் மற்றும் ராக்கி கிப்கென் ஆகியோருடன் ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கன்னடர்கள் சிலர் அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர். வடகிழக்கு மாநிலத்தவர்கள் பார்க்க சீனர்கள் போன்ற தோற்றத்துடன் இருப்பார்கள் என்பதால், இவர்களை பார்த்து அறுவெறுப்புடன் முகத்தை சுழித்தபடி விலகி போகுமாறு அந்த நபர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் கன்னடம் புரியாததால் மணிப்பூர் வாலிபர்கள் திருதிருவென முழித்துள்ளனர். தங்களுக்கு கன்னடம் தெரியாது என்று ஹிந்தியில் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த உள்ளூர்வாசிகள், "கர்நாடகாவில் விளைந்த காய்கறியில் தயாரான உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிகிறது, கன்னடம் மட்டும் பேசத்தெரியாதோ" என்று கூறியபடி அவர்களை அடித்து விரட்டியுள்ளனர். கோபத்தில் மணிப்பூர் வாலிபர்கள் ஏதோ பேசப்போக, கோபத்தின் உச்சிக்கே சென்ற கன்னட நபர்கள், மணிப்பூர் வாலிபர்கள் மூவரையும் விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
மாணவர்கள் உயிர்தப்பிக்க ஓடியபோதும், பைக்கில் விரட்டி வந்துள்ளனர். தப்பியோடிய மைக்கேல் மீது பைக்கை விட்டு மோதி அவரை கீழே தள்ளியுள்ளதுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குள் ஒபேட் என்ற மைக்கேலின் நண்பர்களில் ஒருவர் ஓடிச்சென்று கொத்தனூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரை கூட்டிக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். போலீசாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதற்குள்ளாக மைக்கேல் ரத்தம் வழியும் அளவுக்கு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்து புகாரை பெற்றுக்கொண்டனர் போலீசார். இதுகுறித்து மைக்கேல் கூறுகையில், "போலீசார் தக்க நேரத்தில் வராவிட்டால் அவர்கள் என்னை உயிரோடு விட்டிருப்பார்களா என்பதே சந்தேகம்தான். என்னிடமிருந்த பர்ஸ், பைக் டாக்குமெண்ட் ஆகியவற்றையும் அந்த கும்பல் பறித்துக்கொண்டு ஓடிவிட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications