உ.பி.யை மட்டும் ஊடகங்கள் குறிவைப்பது ஏன்? பாஜக சதி செய்கிறது… சமாஜ்வாதி குற்றச்சாட்டு
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் நடக்கும் குற்றங்களை மட்டும் ஊடகங்கள் குறிவைக்கின்றன. மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை. இது மத்திய அரசு அல்லது பாஜகவின் திட்டமிட்ட சதி என்று சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகரித்து வருவதற்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது 2 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அங்கு மேலும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து மத்திய அரசும் கவலை தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சிடையந்த ஆளும் சமாஜ்வாடி கட்சி, ஊடகங்களை குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் கூறியுள்ளதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி அரசை மட்டுமே குறிவைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்த அளவுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?
மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை. மத்திய அரசு அல்லது பாஜகவின் திட்டமிட்ட சதியாகும்.
மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் நடக்கும் சம்பவங்களையும் ஊடகங்கள் பார்ப்பதில்லை. எனவே, மத்திய அரசிடம் இருந்து புள்ளி விவரங்களைப் பெற்று உ.பி.யின் குற்றப்பட்டியலை மற்ற மாநிலங்களின் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
சமாஜ்வாடி அரசு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications