தேர்தலில் 32 ஆண்டுகளாக கோலோச்சும் 'தலைக்கட்டுகள்'.. இவர்கள் வைப்பதுதான் சட்டமாம்! குஜராத் கள நிலவரம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தற்போது சில கள நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது மாநிலத்தின் இதுவரை 6-7 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையாத எம்எல்ஏக்கள் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் இந்த குறிப்பிட்ட சில எம்எல்ஏக்களின் ஆதிக்கம் இன்று வரையில் தொகுதியில் நீடித்து வருகிறது.
சொந்த கட்சியினரே நினைத்தாலும் அந்த தொகுதிகளில் வேறு ஆட்களை நிற்க வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இவர்கள் தங்கள் தொகுதியிலும் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

பாஜக
இந்த பட்டியலில் முதல் வரிசையில் இருப்பவர் யோகேஷ் படேல். இவர் கடந்த 7 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக நீடித்து வருகிறார். மட்டுமல்லாது, இவரது வாக்கு வாங்கியில் பெரிய அளவுக்கு எந்த சரிவும் ஏற்படவில்லை. 1946ல் பிறந்த இவர் முதன் முறையாக ராவ்புரா தொகுதியில் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அவர் பாஜகவின் இணைந்தார். அப்போதிலிருந்து தற்போது வரை 7 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இந்த 7 தேர்தல்களிலும் அவருக்கு வெற்றிதான். பொதுவாக முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலே அவர்கள் புது வீடு, சொகுசு கார் என பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்விடத்தை மாற்றிக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இவர் அப்போதிலிருந்து தற்போது வரை ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்.

மஞ்சள்பூர்
இந்த எளிமை காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இது அவரது வாக்கு வங்கிக்கு முக்கியமானதாகும். கடந்த 2012 சட்டமன்ற தேர்தலில் 'மஞ்சள்பூர்' தொகுதியிலிருந்து 6வது முறையாக எம்எல்ஏவாக தேர்வானார். அப்போது இவரின் வாக்கு விகிதம் 67.33%. அதேபோல 2017ம் ஆண்டு தேர்தலிலும் அவர் போட்டியிட்டார் அப்போது வாக்கு விகிதம் 65.50%. இதிலிருந்து இவருக்கு எவ்வளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த முறை இந்த தொகுதியை வேறு ஒருவருக்கு ஒதுக்க இருந்தது கட்சி தலைமை. ஆனால் அவர் விடா பிடியாக நின்றதால் கட்சி தலைமையால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே இந்த முறையும் யோகேஷ் படேல்தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

குடும்ப அரசியல்
இதேபோல ஜுக்னியா தொகுதியில் தொடர்ந்து 7 முறை ஆதிக்கம் செய்து வருபவர்தான் 'சோட்டு வாசவா'. இவரது அரசியல் குடும்ப அரசியல்தான். அதாவது தொடக்கத்தில் இவரது தந்தை அரசியல்வாதியாக முக்கிய பொறுப்பில் இருந்தார். அவருக்கு அடுத்து இவர் எம்எல்ஏ வேட்பாளராக கை காட்டப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை இவர் மட்டுமே எம்எல்ஏ. அதேபோல இவருக்கு அடுத்து இவரது மகனை இவர் தனது அரசியல் வாரிசாக வளர்த்து வருகிறார். 1945ல் பிறந்த வாசவா முதன் முதலாக 1985 தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தல் அவருக்கு சாதகமாக அமையவில்லை.

7 முறை எம்எல்ஏ
இதனையடுத்து 1990ல் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார். இந்த முறை அவருக்கு அமோக வெற்றி கிடைத்தது. பழங்குடியினருக்கான உரிமைகள், இதற்கான போராட்டம் என பல்வேறு நோக்கங்களுக்காக காங்கிரஸ், எம்ஐஎம்ஐஎம் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால் எப்படி இருந்தாலும் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இவர்தான் 'ஜுக்னியா' தொகுதியின் முடிசூடா மன்னன். 7 தேர்தல்கள் இடையில் நடந்திருக்கிறது. இதில் அனைத்திலும் வெற்றிக்கொடியை இவர் நாட்டியிருக்கிறார்.

பாகுபலி
அடுத்து 'துவாரகா' தொகுதி. இந்த தொகுதியின் பாகுபலி என்று அழைக்கப்படுபவர் 'பாபுபா மானெக்'. கடந்த 1956ம் ஆண்டு பிறந்த இவர் துவாரகா தொகுயை கடந்த 32 ஆண்டுகளா கட்டி ஆண்டு வருகிறார். 1990ம் ஆண்டு தேர்தலில் இவர் சுயேட்சையாக களம் இறங்கினார். இந்த தேர்தல் மட்டுமல்லாது அடுத்தடுத்த 3 தேர்தல்களிலும் சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்றார். இதனையடுத்து பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்து போட்டியிட்ட கடைசி மூன்று தேர்தல்களிலும் பாபுபா மானெக்தான் இந்த தொகுதியின் 'பாகுபலி'. தனது 34வது வயதில் இவர் குஜராத் சட்டப் பேரவையில் நுழைந்தார். தற்போது இவருக்கு வயது 64. இப்போது வரை எம்எல்ஏவாக இருக்கிறார். நடுவில் ஒருமுறை சுகாதார அமைச்சராக கூட பணியாற்றி இருக்கிறார்.

சுயேட்சை
அடுத்து உள்ளவர் மது ஸ்ரீவஸ்தவா. இவர் கதை சற்று வித்தியாசமானது. ஏனெனில் முதல் இவர் 1982ல் 'வாடி' தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல அடுத்த தேர்தலிலும் பெற்றி பெற்றார். இதனையடுத்து இவர் 'லோக்ஷாஹி மோர்ச்சோ' எனும் கட்சியை உருவாக்கி காங்கிரசுக்கு 'டஃப்' கொடுத்தார். பின்னர் கட்சியை கலைத்துவிட்டு 1998ல் பாஜகவில் இணைந்துவிட்டார். இவர் போட்டியிட்ட 6 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை பாஜகவில் 'சீட்' கொடுக்கப்படாத நிலையில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

5 முறை எம்எல்ஏ
இவரை அடுத்து உள்ளவர் 'கேசுபாய் நக்ரானி'. இவர் குஜராத்தின் 'கரியாதர்' தொகுதியில் 1995ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இடையில் 2012ம் ஆண்டு பாஜவில் இணைத்து தற்போது வரை பாஜக சார்பில் போட்டியிட்டு வருகிறார். அதேபோல குஜராத்தின் 'பாவ்நகர் ஊரக' தொகுதியில் 1995லிருந்து ஆதிக்கம் செலுத்தி வருபவர்தான் 'பாய்' என்று அழைக்கப்படும் புருசோத்தம் சோலங்கி. இவர் மும்பையை சேர்ந்தவராவார். ஆனால் குஜராத்திற்கு வந்த பின்னர் பாஜகதான் இவருக்கு 'சீட்' கொடுத்தது. இவரை போலவே 'நாடியாட்' தொகுதியில் போட்டியிட்டு 5 முறை எம்எல்ஏவாக நீடிப்பவர்தான் 'பங்கஜ் தேசாய்'. இவரும் பாஜகவை சேர்ந்தவராவார்.












Click it and Unblock the Notifications