பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது... சோனியா காந்தி கடும் தாக்கு
Recommended Video
டெல்லி: எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயந்து ஓடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நவம்பர் 3வது வாரம் முதல் டிசம்பர் மூன்றாவது வாரம் வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பது மரபு. ஆனால் இவ்வாண்டு டிசம்பர் 2வது வாரத்தில் குளிர்கால கூட்டத்தொடரை தொடங்கி 10 நாட்களிலேயே நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி கூறியுள்ளதாவது: சரியாக தயார் செய்யப்படாத ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டிய பிரதமர் மோடியால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சந்திக்க தைரியம் இல்லை.
ஜனநாயக கோயில்
குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணிப்பதன் மூலம், மோடி அரசு, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்தப்போகிறது. ஜனநாயகத்தின் கோயில் நடையை சாத்திவிட்டால், அரசியல் சாசன பொறுப்புகளை புறம்தள்ளிவிடலாம் என இந்த அரசு நினைக்கிறது.
குஜராத் தேர்தல்
நாடாளுமன்றம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுவதற்கான இடம். ஆனால் குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டாமல் அஞ்சியுள்ளது அரசு.
பண மதிப்பிழப்பு
மக்களின் வெந்த புண் மீது வேலை பாய்ச்சிய செயல்தான் பண மதிப்பிழப்பு. விவசாயிகள், சிறு வணிகர்கள், இல்லத்தரசிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் படாதபாடு படுகின்றனர்.
இன்னும் அறிவிப்பு
இன்னும் பிரதமர் அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளார். பொய் வாக்குறுதிகளை அளிக்கிறார். அந்த புள்ளி விவரங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாததாக உள்ளன. ஜவகர்லால் நேரு, இந்திரா காந்த ஆகியோர முன்னாள் பிரதமர்கள் பெயர்களை வரலாற்றில் இருந்து அகற்ற மோடி அரசு முயலுகிறது. இவ்வாறு சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ார்.