டெல்லியில் மோடி.. பிரமாண்ட பேரணி.. வாரணாசியில் கங்கைக்குப் பூஜை.. தலைவர்களுடன் ஆலோசனை!
டெல்லி: நாட்டின் அடுத்தப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி டெல்லி வந்துள்ளார். முதல் முறையாக டெல்லி வந்த அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் தான் வென்ற வாரணாசிக்குச் சென்றார். கங்கையில் ஆரத்தி பூஜையில் கலந்து கொண்டார். டெல்லியில் முகாமிட்டுள்ள மோடி பாஜக மூத்த தலைவர்களுடன் அமைச்சரவை அமைப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனைகளைத் தொடர்ந்து வருகிறார்.
282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியி்ல் ஆட்சியமைக்கிறது பாஜக. மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். மே 20ம் தேதி அவரை புதிய எம்.பிக்கள் ஒன்று கூடி நாடாளுமன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கவுள்ளனர். அதன் பின்னர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் மோடி.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நேற்று முதல் முறையாக டெல்லி போனார் மோடி. அங்கு விமான நிலையத்தில் மிகப் பிரமாண்டமான வரவேற்பை பாஜகவினர் அளித்தனர். அந்தப் பகுதியே காவி மயமாக காணப்பட்டது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள், டெல்லியின் புதிய எம்.பி.க்கள் டாக்டர் ஹர்சவர்த்தன், மகேஷ் கிரி, மீனாட்சி லேகி, மனோஜ் திவாரி, உதித்ராஜ், ரமேஷ் பிதூரி, பர்விஷ் வர்மா அனைவரும் திரண்டு வந்து ஆரவாரமான வரவேற்பு அளித்தனர்.
காரில் வந்து ஏறிய மோடி படிக்கட்டில் நின்றவாறே தொண்டர்களின் வாழ்த்தொலிகளுக்கும், வரவேற்புக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புன்னகை பூத்தவாறு, வெற்றிச்சின்னமாக இரட்டை விரல்களைக் காட்டினார்.
விமான நிலைய வளாகத்தில் இருந்து மோடியின் வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் நகர்ந்து வெளியே வரவே சிரமமாக இருந்தது. அந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் அந்த வாகனங்களை சூழ்ந்து கொண்டது.
விமான நிலையத்தில் இருந்து அசோகா சாலையில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகம் வரையில் 16 கி.மீ. தொலைவுக்கு 2 மணி நேரம் மோடி, பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த பேரணியில் பாரதீய ஜனதா தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணி வகுத்து வந்தனர்.
சாலையில் இரு மருங்கிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடி ஆங்காங்கே நின்று, அவர்களின் வரவேற்பை ஏற்று, இரு விரல்களை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கங்கையில் ஆரத்தி
டெல்லி சென்ற பின்னர், தான் வென்ற வாரணாசிக்கு வருகை தந்தார் மோடி. அங்கு காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி கும்பிட்டார். கங்கையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தசாஸ்வமேத் காட் என்ற இடத்தில் உள்ள கங்கை ஆற்றுப்பகுதிக்கு சென்ற மோடி, அங்கு ஸ்லோகங்கள் முழங்க, கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். மோடியுடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அமீத் ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது கங்கை ஆரத்தியில் பங்கேற்க தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் வென்ற பின்னர் முதல் வேலையாக இதைச் செய்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications