மீண்டும் பெண் குழந்தையா? மருமகள் வயிற்றில் ஆசிட் வீசிய கொடூர மாமியார் !
நெல்லூர்: மருமகள் கருவிலிருப்பது பெண் குழந்தை என்று குடும்ப ஜோதிடர் கணித்துக் கூறியதால், மருமகள் மேல் திராவகம் வீசிய ஆந்திர மாநிலம் நெல்லூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் கிரிஜா (27) இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் அண்மையில் மீண்டும் கருவுற்றிருந்தார். இவரது கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அவருடைய கணவர் வீட்டின் குடும்ப ஜோதிடர் கணித்துக் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிரிஜாவின் மாமியார் மற்றும் கிரிஜாவின் கணவரின் சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து கிரிஜாவின் வயிற்றின் மேல் திராவகத்தை வீசியுள்ளனர். கிரிஜாவின் கதறல் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 30 சதவீத தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக கிரிஜாவின் மாமியார் மற்றும் கணவரின் சகோதரி மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள்ளது. கிரிஜாவின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது மாமியார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.