மோடி அலை புஸ்..... ம.பி. லோக்சபா இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி: காங். வேட்பாளர் அபார முன்னிலை!!
போபால்: மத்திய பிரதேசத்தின் ரட்லம் லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியா வென்றுள்ளார். ஆனால் தேவாஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வென்றுள்ளது.
ம.பி. மாநிலத்தில் ரட்லம்- ஜபூவா லோக்சபா தொகுதிக்கும் தேவாஸ் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
ரட்லம் லோக்சபா தொகுதியானது நீண்டகாலம் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் திலீப் சிங் பூரியா வெற்றி பெற்றார். இதே திலீப் சிங் பூரியா 1980ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இத்தொகுதியில் 5 முறை வென்றவர். லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.கவுக்கு தாவினார். மோடி அலையால் வெற்றியும் பெற்றார். ஆனால்,கடந்த ஜூன் மாதம் அவர் காலமானார். இதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

கந்திலால் பூரியா வேட்பாளர்
இத்தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியாவை வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். பா.ஜ.கவோ மறைந்த திலீப் சிங்கின் மகளும் எம்.எல்.ஏவுமான நிர்மலா பூரியாவை வேட்பாளராக நிறுத்தியது.

மோடி அலை காலி
இந் நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் இந்தத் தொகுதியில் பாஜக பெரும் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கந்திலால் 80,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலின் போது வீசிய மோடி அலை இப்போது முழுவதுமாக காலாவதி ஆகிவிட்டது என்பதை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது.

தேவாஸில் பா.ஜ.க. வெற்றி
அதே போல இந்த மாநிலத்தின் தேவாஸ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாக இருந்த "தேவாஸ்" மன்னர் பரம்பரையைச் சேர்ந்த துகோஜி ராவ் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு துகோஜி ராவ் மனைவி காயத்ரி ராஜேவை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியது.
இத் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது. இது அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

வாரங்கலில்...
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வென்றது. வாரங்கல் எம்.பி.யாக இருந்த கடியம் ஸ்ரீஹரி தெலுங்கானாவின் துணை முதல்வராக நியமிப்பட்ட நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடந்த 21-ந் தேதியன்று இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பசுனூரி தயாகர்; காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்தியநாராயணா; தெலுங்குதேசம்- பா.ஜ.க. கூட்டணியில் பா.ஜ.கவின் தேவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பசுனூரி தயாகர் மொத்த 6,15, 544 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் கட்சியின் சத்தியநாரயணா, 1,56,315 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் பசுனூர் சுமார் 4,59,229 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். பா.ஜ.கவின் தேவ்யா 1,29,868 வாக்குகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தெலுங்கானா மக்கள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications