மிளகு பொடி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை செக் அப் செய்து அனுமதிக்க முடிவு

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமையன்று தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது ஆந்திரா மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. லகடபதி ராஜகோபால் மிளகு பொடியை தூவினார் இதனால் பல எம்.பி.க்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.பி.ஒருவர் கத்தியை வைத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்தும் இருந்தார். மக்கள் பிரதி நிதிகளான எம்.பி.க்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், நடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்களிடம் போலீசார் சோதனை செய்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த வியாழக்கிழமை ஆந்திர எம்.பிக்கள் மிளகு பொடி, கத்தி போன்றவற்றை அவைக்குள் கொண்டு சென்றுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமை சீர் குலைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மரபு சிதைக்கப்படுகிறது. எம்.பி.க்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் மீராகுமார் கூறினார்.
வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நாடாளுமன்றத்தின் கூட்டத்தின் போது நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தினார். இதற்காக நாடாளுமன்றப் பாதுகாப்பு குழு எம்.பி.க்களின் அவசர கூட்டத்தை கூட்டவும் உத்தரவிட்டார்.
இந்த கூட்டம் வரும் திங்கட்கிழமை 17-ந் தேதி கூடுகிறது. இதற்கு பா.ஜனதா மூத்த தலைவரும், நாடாளுமன்றப் பாதுகாப்பு எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவருமான கரிய முண்டா தலைமை தாங்குகிறார்.












Click it and Unblock the Notifications