விரைவில் சந்திரபாபு நாயுடுவை மக்கள் கல்லால் அடித்து விரட்டியடிப்பார்கள்... ஜெகன்மோகன் ஆருடம்
நகரி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பித்தலாட்ட அரசாங்கம் நடத்தும் சந்திரபாபு நாயுடுவை மக்கள் கல்லால் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், தங்களது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.
அதன்படி, நேற்று குண்டூரில் நடந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

பொய்யான வாக்குறுதிகள்...
பொய்யான வாக்குறுதிகளை சொல்லி சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்து உள்ளார். தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்ல நான் விரும்பவில்லை. சந்திரபாபு நாயுடு போல் நானும் சொல்லி இருந்தால் மக்கள் நம்மை ஆட்சியில் அமர்த்தி இருப்பார்கள். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் மீண்டும் எப்படி அவர்கள் முகத்தில் விழிக்க முடியும்?

கடன் தள்ளுபடி...
ஆனால் சந்திரபாபு நாயுடு விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின் போது கூறினார். இதனை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

கடன் சுமையால் அவதி...
ஆனால் இப்போது கடனை தள்ளளுபடி செய்ய இயலாது என்கிறார். அவரை நம்பி கடனை கட்டாத விவசாயிகள் இப்போது அதிக வட்டி சுமை காரணமாக அவதிப்படுகிறார்கள். கடன் தள்ளுபடியில் சந்திரபாபு நாயுடு ஒரு தகவலும், அவரது மந்திரிகள் ஒரு தகவலும், கட்சி நிர்வாகிகள் ஒரு தகவலும் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

போராட்டம்...
கடனை தள்ளுபடி செய்யாததால் மகளிர் குழுக்கள் இன்று வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

எத்தனை காலம் ஏமாற்றுவார்..?
ஒரு பொய்யை எத்தனை காலம் சொல்லி ஏமாற்ற முடியும். எனவே விரைவில் மக்கள் சந்திரபாபுநாயுடுவை கல்லால் விரட்டியடிக்கும் காலம் வரும். அவரது பித்தலாட்ட அரசியலுக்கு மக்கள் விடை கொடுப்பார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications