காங்கிரஸுக்கு சவாலான மோடியை நிராகரிக்க முடியாது: ப. சிதம்பரம்
பனாஜி: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி காங்கிரஸுக்கு சவாலானவர். அவரை நிராகரிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடி சவாலானவர் என்பதை அரசியல் கட்சி என்கிற முறையில் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அவரை நிராகரிக்க முடியாது. அவர் முக்கிய எதிர்கட்சியின் வேட்பாளர். அவரை நிச்சயம் கண்டுகொள்ள வேண்டும்.

பொதுக் கூட்டங்களில் மோடி பயன்படுத்தும் வார்த்தைகள், அவரின் கொள்கைகள் குறித்த கவலை உள்ளது. இது வரை அவர் எந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும் பேசவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறார்.
வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ராகுல் காந்தி தான் கட்சி மற்றும் அரசின் தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சி விரும்புகிறது.
இளம் தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். சிறந்த ஆட்சி செய்ய போதிய அளவு திறமையான இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் நம் நாட்டில் உள்ளனர்.
ராகுல் பொதுக் கூட்டங்களில் முக்கிய விவகாரங்களில் தன்னுடைய கருத்துக்கள் என்னவென்பதை தெரிவிக்க வேண்டும். அவருக்கு நான் அறிவுரை கூறுவதாக இருந்தால், இதைத்தான் நான் சொல்வேன்.
பிரதமர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். அவர் எதுவுமே பேசுவதில்லை என்றெல்லாம் கூற முடியாது. நிச்சயம் அவர் பேசுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications