ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, அவரு பேச்ச அவரே கேக்கமாட்டாரு.. பண பஞ்சத்துக்கு நடுவே வெங்கையா பஞ்ச்
டெல்லி: எடுத்த முடிவை திரும்ப பெறும் பழக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் ரத்தத்திலேயே கிடையாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையில், திமுக-அதிமுக போன்ற எதிரும் புதிருமான கட்சிகள் கூட ஒன்றிணைந்து போராட்டம் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் இன்று வெங்கையா நாயுடு கூறுகையில், எடுத்த முடிவை திரும்ப பெறும் பழக்கம், மோடியின் ரத்தத்திலேயே கிடையாது. எனவே ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பிலும் எந்த மாற்றமும் கிடையாது.
மோடி முதலில் வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்க முயற்சித்தார். தற்போது நாட்டிள்ள கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் மோடியின் இலக்காகும். மேலும் யாரும் யாருக்கும் நேரிடையாக பணம் செலுத்துவதை தடுத்து கருப்பு பணத்தை ஒழிப்பதே பிரதமரின் திட்டம். ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்று திரள்வது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அவர்கள் பலம் தான் என்ன? நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.