இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராதீங்க… அதிமுகவின் புதிய கோஷ்டி போர்க் கொடி
அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை இரு அணிகளுக்கும் வழங்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்கள் அணி என்ற புதிய கோஷ்டி போர்க் கொடி தூக்கியுள்ளது.
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் என எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்கள் அணி என்ற புதிய கோஷ்டி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டன. இரு அணிகளுமே இரட்டை இலை சின்னம் எனக்குத்தான் என்று சொந்தம் உரிமை கொண்டாடி வந்தன. பிரச்சனை தேர்தல் ஆணையத்திற்கு சென்றதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரி உரிய ஆதாரங்களையும், பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்து வருகின்றன.
புதிய கோஷ்டி
இந்நிலையில் தற்போது அதிமுக தொண்டர்கள் அணி என்ற புதிய அணி ஒன்று முளைத்து, தேர்தல் ஆணையத்திற்கு புதிய கோரிக்கையை வைத்துள்ளது. இந்த அணியைச் சேர்ந்த சென்னை புகழேந்தி, கடலூர் டி.செல்வ நாயகம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று டெல்லிக்கு சென்றது.
கமிஷனிடம் மனு
அந்தக் குழு அங்கு தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனுவை அளித்துள்ளது. மேலும் அதிமுகவை சேர்ந்த 1,300 உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்ற ஆவணங்களையும் அந்தக் குழு அளித்துள்ளது.
எதிர்ப்பு
இதுகுறித்து புதிய கோஷ்டியினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியும், சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இது தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிரானது.
உட்கட்சி தேர்தல்
உட்கட்சி தேர்தலை சந்தித்து கடைக்கோடி தொண்டரும் பொதுச் செயலாளராக வரலாம் என்றே அதிமுக சட்டவிதிகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையமே உட்கட்சி தேர்தலை நடத்தி, தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளரிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க வேண்டும்.
யாருக்கும் வேண்டாம்
அதுவரை எந்த அணிக்கும் சின்னத்தை வழங்கக்கூடாது. இதுதொடர்பான வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம். தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கே என்ற கொள்கை கோஷத்தோடு இதனைச் செய்கிறோம் என்று அவர்கள் கூறினர்.