தமிழகத்திற்கு எதிராக.. கர்நாடக குழுவுடன் உமாபாரதியிடம் மனு கொடுத்த திருச்சி நிர்மலா சீதாராமன்!
டெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து நீர் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த கர்நாடக குழுவில் தமிழகத்தை அதிலும் குறிப்பாக திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருந்தது பாஜகவின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியைத்தான் தற்போது கர்நாடக முழுசாக நம்புகிறது. அவரும் தமிழகத்திற்கு எதிரான போக்கில்தான் இருக்கிறார். மோடி அரசுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே இணைப்புப் பாலம் போல மாறியுள்ளார் தமிழகத்திற்கும் அமைச்சராக இருக்க வேண்டியவரான உமா பாரதி.
இந்த நிலையில் உமா பாரதியை கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார், ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்று பார்த்து தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். அந்தக் குழுவில் நிர்மலா சீதாராமனும் இடம் பெற்றிருந்தார்.
இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருச்சிதான் இவரது முன்னோர்களின் ஊர். காவிரி பூமியில் வளர்ந்த நிர்மலா, அந்தக் காவிரியை தமிழகத்திற்குத் தரக் கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் குழுவுடன் இணைந்து உமாபாரதியை பார்த்திருப்பது தமிழகத்தினரின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.