பரிசு ம்ஹூம், பணம் நோ நோ: அமைச்சர்களுக்கு மோடியின் அதிரடி கட்டளை
டெல்லி: மத்திய அமைச்சர்கள் பரிசுப் பொருட்கள் வாங்குவது குறித்து பிரதமர் மோடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறோம், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மத்திய அமைச்சர்கள் நன்கொடை பெறக்கூடாது என்று புதிய விதிமுறையை விதித்துள்ளார். மோடி அரசின் புதிய நடத்தை விதிமுறைகளில் கூறியிருப்பதாவது,
நன்கொடை
ஒரு அமைச்சர் தனிப்பட்ட முறையிலோ, குடும்பத்தார் மூலமாகவோ எந்த காரணத்திற்காகவும் பணம் பெறவே கூடாது.
வேலை
அமைச்சர்களின் கணவரோ, மனைவியோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் இந்தியாவிலோ அல்லது வேறு நாட்டிலோ பிரதமரின் அனுமதி இன்றி வேலையில் சேரக் கூடாது.
பரிசு
ஒரு அமைச்சர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது அல்லது இந்தியாவில் உள்ள வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் பரிசுப் பொருட்களில் ரூ.5 ஆயிரத்திற்கு அதிகமாக மதிப்புள்ளவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது.
கருவூலம்
ரூ.5 ஆயிரத்திற்கு அதிகமான மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அமைச்சர்கள் கருவூலத்தில் அதன் மேற்பட்ட தொகையை செலுத்தி பரிசை வைத்துக் கொள்ளலாம். மரபுப்படியான பரிசு பொருட்களை அமைச்சர்கள் வைத்துக் கொள்ளலாம்.