2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, உள்ளாட்சி பதவி 'நோ'... அஸ்ஸாம் அரசு தடாலடி
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை வழங்கப்படாது என அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.
திஸ்பூர்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என அஸ்ஸாம் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அஸ்ஸாம் அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை கவனிக்காமல் விட்டாலோ 10 சதவீதம் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
வயதான பெற்றோர்களையும் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை கவனிக்கவே இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை அஸ்ஸாம் அரசு வெளியிட்டுள்ளது.

பதவி பறிபோகும்
அதாவது, அஸ்ஸாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கும் கட்டுப்பாடு
சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாதாம். எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்த விதியை மீறினால் தகுதி இழப்புக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே திருமணம் செய்தால்..
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் 2 குழந்தைகள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த
2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 கோடியே 66 லட்சமாக இருந்த அஸ்ஸாமின் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாகவே மக்கள் தொகை கொள்கையை திருத்தி அமைத்துள்ளதாக அம்மாநில அரசு விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications