மோடி அலை வீசவில்லை- குஜராத் மாதிரி பிற மாநிலத்துக்கு பொருந்தாது: முரளி மனோகர் ஜோஷி!
டெல்லி: நாட்டில் வீசுவது மோடி அலை அல்ல- பாஜக அலைதான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
மனோரமா நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிநிதிதான் மோடி. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சி அவரது தனிப்பட்ட அலை அல்ல. இது பாரதிய ஜனதா கட்சியின் அலை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதாவின் அனைத்து தலைவர்களின் ஆதரவையும் அவர் பெற்றிருக்கிறார்.
மோடியின் குஜராத் மாதிரி என்பது எல்லா மாநிலத்துக்கும் பொருந்தாது. ஏனெனில், மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை மற்றொரு மாநிலத்தில் எதிர்பார்க்க முடியாது.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பான வளர்ச்சித் திட்டங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படலாம்.
ஜம்மு-காஷ்மீர் அல்லது அருணாசலப்பிரதேசம் அல்லது கேரளம் (மலைப்பிரதேசங்கள்) ஆகியவற்றில் எந்த வகை வளர்ச்சியை முன்மாதிரியாக மேற்கோள் காட்ட முடியுமா?
எனவே இந்த முன்மாதிரி அல்லது அந்த முன்மாதிரி என்று எதுவும் சொல்வதற்கில்லை. நல்ல விஷயங்கள் எங்கு உள்ளதோ அவை கருத்தில் கொள்ளப்படும். திரிபுராவில் இருந்தும் சில மாதிரிகள் பின்பற்றப்படலாம்.
ஜஸ்வந்த் சிங் விவகாரத்தைப் பொறுத்தவரை, பார்மர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட முடிவு கட்சியின் மத்திய தேர்வுக்குழுவில் எடுக்கப்பட்டதல்ல. இது கட்சித் தலைவரான ராஜ்நாத் சிங்கும், ராஜஸ்தான் முதல்வரும் எடுத்த முடிவு.
இவ்வாறு முரளிமனோகர் ஜோஷி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications