ஜெ. வழக்கில் அப்பீல் செய்யாவிட்டால் ஊழலை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும்: ஆச்சாரியா
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு அப்பீலுக்கு செல்லாவிட்டால், அது ஊழலுக்கு வக்காலத்து வாங்குவது போன்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, கர்நாடக அரசுக்கு கொடுத்த சிபாரிசில் கூறியுள்ளாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தீர்ப்பை ஆய்வு செய்த சிறப்பு வக்கீல் ஆச்சாரியா, இந்த வழக்கு, மேல்முறையீடுக்கு ஏற்றது என்று கூறி, கர்நாடக அரசுக்கு சிபாரிசு அளித்தார்.

சிபாரிசு விவரம் கசிவு
அந்த சிபாரிசு விவரங்களை முழுமையாக வெளியே சொல்ல முடியாது என்று ஆச்சாரியா மறுத்துவிட்டார். ஆனால், அரசுக்கு அவர் அளித்த சிபாரிசின் சில முக்கிய விவகாரங்கள் வெளியே கசித்துள்ளன. அதுகுறித்து கூறப்படுவதாவது: இந்த வழக்கில், கர்நாடகம் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மேல்மட்ட ஊழல்
மேல்முறையீடு செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு என்று மக்களுக்கு தெரியும். அப்படி, மேல்முறையீடு செய்வதை தவிர்த்தால், மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்ய இது தூண்டுகோலாக அமைந்துவிடும்.

ஹைகோர்ட் கருத்தில் எடுக்கவில்லை
கணிதத்தில் ஏற்பட்ட தவறால், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், சொத்துக்குவிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. கீழ்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஹைகோர்ட்டோ, ஜெயலலிதாவின் பல்வேறு சொத்துக்களை, கருத்தில் எடுக்கவேயில்லை. கட்டுமானம், திருமணச் செலவு மற்றும் ஒரு சில வருவாய் போன்ற அம்சங்களை மட்டுமே கருத்தில் எடுத்து, மேலோட்டமாக தீர்ப்பை கூறிவிட்டது.

ஹைகோர்ட் கண்டுகொள்ளவில்லை
மேலும், கர்நாடக அரசின் எழுத்துப்பூர்வ வாதத்தை முழுமையாக படித்து பார்த்து தீர்ப்பளிக்குமாறு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு ஆச்சாரியா தனது சிபாரிசில் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications