அமைதி திரும்பும் நேரத்தில்.. மீண்டும் பதற்றம்! மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் குண்டு வெடிப்பு!
இம்பால்: மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 10 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 180க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமாக சொல்லப்படும், அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் சமீபத்தில் திரும்ப பெறப்படுவதாக அறவிக்கப்பட்டது. எனவே, வன்முறைகள் படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு, மணிப்பூரின் தனமஞ்சூரி பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்றிரவு சரியாக 9.35 மணியளவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அலுவலகத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications