நாட்டின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் வெறும் 24% தான் நீர் உள்ளது: பகீர் தகவல்
டெல்லி: வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் இருக்கும் நீரின் அளவு குறைந்து வெறும் 24 சதவீதம் தான் இருப்பு உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து மக்களை கிளீன் போல்டாக்கி வருகிறது. ஏற்கனவே பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் வெயிலின் உக்கிரத்தால் நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் இருக்கும் நீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.

நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு 37.92 பில்லியன் க்யூபிக் மீட்டராக குறைந்துள்ளது. அதாவது நீர்த்தேக்கங்களில் வெறும் 24 சதவீதம் தான் நீர் உள்ளது. பொதுவாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் பருவமழை பெய்து நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் நீர் வரத்தும் குறைந்துவிட்டது.
இந்த 91 நீர்த்தேக்கங்களில் இருந்து தான் சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும். இந்நிலையில் நீர் இருப்பு குறைந்துள்ளது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது. தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஷா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான அளவு நீர் உள்ளது.
ஆந்திரா மற்றும் திரிபுரா ஆகிய மாநில நீர்த்தேக்கங்களில் மட்டும் தான் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நீர் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஜூன்-செப்டம்பர் வரையிலான காலத்தில் நல்ல மழை பெய்து இந்த நீர்த்தேக்கங்கள் நிறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications