மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு நவாஸ் ஷெரிப்புக்கு அழைப்பு
டெல்லி: நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதும், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்தார்.
இப்போது 26ம்தேதி மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரிப்புக்கு இந்திய அரசு சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்விரு அண்டை நாடுகளுக்கு நடுவேயான இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த இரு தரப்பில் இருந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தெளிவாகிறது.
வாஜ்பாய் முதல்வராக இருந்தபோதும் பாகிஸ்தானுடன் இணக்கமாக செல்லவே இந்தியா முயன்றது. பாகிஸ்தானுக்கு பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தது உட்பட பல முன் முயற்சிகளை வாஜ்பாய் எடுத்து வைத்தார். ஆனால், பிற்போக்குவாதிகளாலும், தீவிரவாத அமைப்புகளாலும் இந்திய-பாகிஸ்தான் உறவு சீர்கெட்டது நினைவிருக்கலாம்.